Bible Language

Psalms 143 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். என் ஜெபத்திற்குச் செவிகொடும். நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும். நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
2 உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும். என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.
3 ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
4 நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன். என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.
5 ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன். நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
6 கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
7 விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும். நான் என் தைரியத்தை இழந்தேன். என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும். கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
8 கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும். நான் உம்மை நம்புகிறேன். நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும். நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன்.
9 கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன். என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும். நீரே என் தேவன்.
11 கர்த்தாவே, என்னை வாழவிடும். அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள். நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும். என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும். என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும். ஏனெனில் நான் உமது ஊழியன்.