Bible Language

Psalms 81 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள். இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
2 இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள். வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
3 மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள். முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள். அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
4 அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
5 தேவன் யோசேப்பை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார். எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.
6 தேவன், "உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன். உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
7 "நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள். நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன். புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன். மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.
8 "எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன். இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
9 வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன். நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன். இஸ்ரவேலே, உன் வாயைத் திற, நான் உன்னைப் போஷிப்பேன்.
11 "ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை. இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன். இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால், என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன். இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்" என்றார்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார். அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்".