Bible Versions
Bible Books

Isaiah 57 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 நீதிமான்கள் அழிந்துவிட்டனர். எவரும் கவனிக்கவில்லை. நல்லவர்கள் ஒன்று கூடியிருக்கின்றனர். ஆனால் ஏனென்று புரிந்துகொள்வதில்லை. கஷ்டங்கள் வருகிறதென்றும், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்களென்பதையும் அறிந்துகொள்ளவில்லை.
2 ஆனால் சமாதானம் வரும். ஜனங்கள் தம் சொந்தப் படுக்கையில் ஓய்வுகொள்வார்கள். தேவன் விரும்பும் வழியில் அவர்கள் வாழ்வார்கள்.
3 "சூனியக்காரியின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்! உங்கள் தந்தை விபச்சாரம் செய்தான். உங்கள் தாயும் விபச்சாரத்திற்காகத் தன் உடலை விற்றவள். இங்கே வாருங்கள்!
4 நீங்கள் கெட்டவர்கள். பொய்யான பிள்ளைகளாகிய நீங்கள் என்னை பரிகாசம் செய்கிறீர்கள். நீங்கள் எனக்கு எதிராக வாயைத் திறக்கிறீர்கள். நீங்கள் என்னைப் பார்த்து நாக்கை நீட்டுகிறீர்கள்.
5 ஒவ்வொரு பச்சையான மரத்தினடியிலும் நீங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். ஒவ்வொரு ஓடை அருகிலும் பிள்ளைகளைக் கொல்கிறீர்கள். அவர்களைப் பாறைகளில் பலி கொடுக்கிறீர்கள்.
6 ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். அவற்றைத் தொழுதுகொள்ள அவற்றின் மீது திராட்சைரசத்தை ஊற்றுகிறீர்கள். அவற்றிற்கு நீங்கள் பலி கொடுக்கிறீர்கள். ஆனால், அந்தப் பாறைகளே நீ பெற்றுக்கொள்ளும் எல்லாம் ஆகும். இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நினைக்கிறாயா? இல்லை. இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தாது. ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய்.
7 அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய்.
8 பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய். அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய். அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய். நீ என்னோடு இருந்தாய். ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய். என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய். கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய். பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய்.
9 நீ உனது தைலத்தையும், வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தி மோளேகுக்காக அழகுபடுத்துகிறாய். தொலைதூர நாடுகளுக்கு உனது தூதுவர்களை அனுப்பினாய். உன் செய்கை உன்னை மரண இடமான பாதாளம்வரை கொண்டுபோய்விடும்.
10 "இவற்றைச் செய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருக்கவேண்டும். ஆனால், நீ எப்பொழுதும் சோர்வடைந்ததில்லை. நீ புதிய பலத்தைக் கண்டுகொண்டாய். ஏனென்றால், நீ அவற்றில் மகிழ்ச்சியடைந்தாய்.
11 என்னை நீ நினைக்கவில்லை. என்னை நீ கண்டுகொள்ளவும் இல்லை. எனவே யாரைப் பற்றி நீ கவலைப்பட்டாய்? நீ யாருக்கு அஞ்சிப் பயப்பட்டாய்? நீ ஏன் பொய் சொன்னாய்? கவனி! நான் நீண்ட காலமாக அமைதியாக இருக்கிறேன். நீ என்னை மகிமைப்படுத்தவில்லை.
12 உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது. நீ செய்த மதத் தொடர்பானவற்றையும் சொல்ல முடிந்தது. ஆனால், அவை பயனற்றவை.
13 உனக்கு உதவி தேவைப்படும்போது, அந்தப் பொய்த் தெய்வங்களிடம் கதறுகிறாய். அவை உன்னைச் சுற்றியுள்ளன. அவை உனக்கு உதவட்டும். ஆனால், நான் உனக்குக் கூறுகிறேன். அவற்றைக் காற்று அடித்துப் போகும். உன்னிடமிருந்து இவற்றையெல்லாம் சிறு காற்று கொண்டுபோகும். ஆனால், என்னைச் சார்ந்திருக்கிற ஒருவன் நான் வாக்குப்பண்ணின பூமியைப் பெறுவான். அப்படிப்பட்டவன் எனது பரிசுத்தமான மலையைப் பெறுவான்.
14 சாலைகளைச் சுத்தம் செய்க! சாலைகளைச் சுத்தம் செய்க! எனது ஜனங்களுக்கு வழி தெளிவாக இருக்கும்படி தடைகளை நீக்குங்கள்!
15 தேவன் உயர்ந்தவர்! உன்னதமானவர், தேவன் என்றென்றும் ஜீவிக்கிறார். தேவனுடைய நாமம் பரிசுத்தமானது. தேவன் கூறுகிறார், "நான் உயர்ந்த பரிசுத்தமான இடத்தில் வாழ்கிறேன். ஆனால், அதோடு துக்கமும் பணிவும்கொண்ட ஜனங்களோடும் வாழ்கிறேன். நான் உள்ளத்தில் பணிவுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன். நான் தங்கள் இருதயங்களில் துக்கமுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன்.
16 நான் என்றென்றும் தொடர்ந்து போரிடமாட்டேன். நான் எப்பொழுதும் கோபமாய் இருக்கமாட்டேன். நான் தொடர்ந்து கோபமாக இருந்தால், எனக்கு முன்பாக மனிதனின் ஆவியும், நான் அவர்களுக்குத் கொடுத்த ஆத்துமாவும் சாகும்.
17 இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது. எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன். நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன். இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது. இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது.
18 இஸ்ரவேல் எங்கு சென்றாலும் நான் பார்த்தேன். எனவே, நான் அவனைக் குணப்படுத்துவேன். (மன்னிப்பேன்) நான் அவனை நடத்தி அவனுக்கு ஆறுதல் கூறுவேன். அவன் சமாதானம் அடையுமாறு வார்த்தைகளைச் சொல்வேன். பிறகு, அவனும் அவனது ஜனங்களும் துக்கத்தை உணரமாட்டார்கள்.
19 நான் அவர்களுக்குச் ‘சமாதானம்’ எனும் புதிய வார்த்தையைக் கற்றுத் தருவேன். என்னருகிலே உள்ள ஜனங்களுக்குச் சமாதானத்தைத் தருவேன். தொலை தூரத்திலுள்ள ஜனங்களுக்கும் சமாதானத்தைத் தருவேன். நான் அந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்)." கர்த்தர் தாமே இவற்றைச் சொன்னார்.
20 ஆனால் தீய ஜனங்கள் கொந்தளிப்பான கடலைப் போன்றவர்கள். அவர்களால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கமுடியாது. அவர்கள் கோபத்தோடு மண்ணைக் கலக்கும் கடலைப்போன்று உள்ளனர்.
21 "தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை" என்று என் தேவன் கூறுகிறார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×