Bible Versions
Bible Books

Acts 2 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 பெந்தெகொஸ்தே என்னும் திருநாளின்போது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.
2 அப்பொழுது திடீரென, பெருங்காற்று வீசுவதுபோன்ற இரைச்சல் வானத்தினின்று உண்டாகி, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3 நெருப்புப்போன்ற நாவுகள் அவர்களுக்குத் தோன்றிப் பிளவுண்டு, ஒவ்வொருவர்மேலும் வந்து தங்கின.
4 எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசத்தொடங்கினர்.
5 அச்சமயத்தில், வானத்தின்கீழ் இருக்கும் எல்லா நாட்டினின்றும் பக்தியுள்ள யூதர்கள் வந்து யெருசலேமில் தங்கியிருந்தார்கள்.
6 அந்த இரைச்சலைக் கேட்டு மக்கள் கூட்டமாகக் கூடினார்கள்; அவர்கள் பேசுவதை மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் மொழியில் கேட்டுத் திடுக்கிட்டார்கள்.
7 அனைவரும் திகைத்துப்போய் வியப்புடன், "இதோ! பேசுகிற இவர்கள் எல்லாரும் கலிலேயர் அல்லரோ?
8 அப்படியிருக்க அவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் நம் தாய்மொழியில் கேட்பதெப்படி?
9 பார்த்தர், மேதர், எலாமீத்தர் ஆகியோரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா,
10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சீரேனே நகரை அடுத்த லீபியாவின் பகுதிகள் ஆகிய நாடுகளில் வாழ்பவரும், உரோமையிலிருந்து வந்தவர்,
11 யூதர், யூதமதத்தைத் தழுவியவர், - கிரேத்தர், அரபியர் ஆகிய நாம் யாவரும் நம் மொழிகளிலேயே கடவுளின் மாபெரும் செயல்களை அவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
12 எல்லாரும் திகைத்துப்போய், "இதைப்பற்றி என்னதான் நினைப்பது ?" என்று ஒருவர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டு மனங்குழம்பி நின்றனர்.
13 சிலர் "இவர்களுக்கு மதுமயக்கமோ" என்று ஏளனம் செய்தனர்.
14 அப்பொழுது இராயப்பர் பதினொருவரோடு எழுந்துநின்று, மக்களை நோக்கி, உரத்த குரலில் பேசியதாவது: "யூதர்களே, மற்றும் யெருசலேம்வாழ் மக்களே, நான் சொல்வதை அறிந்துகொள்ளுங்கள்; என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.
15 நீங்கள் நினைப்பதுபோல் இவர்கள் மதுமயக்கம் கொண்டவர்களல்லர்: இப்போது காலை ஒன்பது மணிதானே.
16 ஆனால், இது இறைவாக்கினரான யோவேல் கூறிய நிகழ்ச்சியே:
17 ' கடவுள் கூறுவது: இதோ! இறுதி நாட்களில் எல்லார்மேலும் என் ஆவியைப் பொழிவேன்; உங்கள் புதல்வர் புதல்வியர் இறைவாக்கு உரைப்பர், உங்கள் இளைஞர் காட்சிகள் அருளப்பெறுவர், உங்கள் முதியோர் கனவுகள் காண்பர்.
18 ஆம், அப்பொழுது என் அடியான், என் அடியாள் ஒவ்வொருவர்மீதும் என் ஆவியைப் பொழிவேன்; அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.
19 இன்னும், விண்ணில் அற்புதங்களும் மண்ணில் அருங்குறிகளும் காட்டுவேன்: எங்குமே இரத்தமும் நெருப்பும் புகையும்.
20 ஒளிவிளங்கும் பெருநாளாம் ஆண்டவரின் நாள் வருமுன், கதிரோன் இருளாகும், நிலவோ இரத்தமாய் மாறும்.
21 அப்பொழுது, ஆண்டவரின் பெயரைச் சொல்லி மன்றாடும் எவனும் மீட்புப் பெறுவான். '
22 "இஸ்ராயேல் மக்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்: புதுமைகள், அற்புதங்கள், அருங்குறிகளால் நாசரேத்தூர் இயேசு கடவுளது சான்று பெற்றவராக உங்கள்முன் எண்பிக்கப்பெற்றார். ஏனெனில், நீங்கள் அறிந்திருப்பதுபோல், இவற்றையெல்லாம் உங்கள் நடுவில் கடவுளே அவர்வழியாகச் செய்தார்.
23 கடவுளின் திட்டத்திற்கும் முன்னறிவுக்கும் ஏற்பக் கையளிக்கப்பட்ட இவரைத்தாம், நீங்கள் திருச்சட்டம் அறியாதவர்களைக்கொண்டு சிலுவையிலறைந்து கொன்றீர்கள்.
24 கடவுளோ அவரை மரண வேதனைகளினின்று விடுவித்து, உயிர்த்தெழச் செய்தார்; ஏனெனில், மரணம் அவரைத் தன்பிடியில் வைத்திருத்தல் இயலாதது.
25 அவரைப்பற்றித் தாவீது கூறுவது: ' ஆண்டவர் என்றுமே என் கண்முன் உள்ளார்; நான் அசைவுறாதபடி அவர் என் வலப்பக்கம் நிற்கிறார்.
26 இதனால் என் உள்ளம் மகிழ்ந்தது, என் நாவு அக்களிப்பு எய்தியது; என் உடலும் நம்பிக்கையில் நிலைத்திருக்கும்.
27 ஏனெனில், என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர், உம் புனிதர் அழிவுகாண விடமாட்டீர்.
28 வாழ்வின் வழிகளை எனக்குக் காட்டினீர், உம் திருமுன் நிற்கும் என்னை மகிழ்வால் நிரப்புவீர். '
29 "சகோதரரே, மூதாதையாகிய தாவீதைப்பற்றி ஒளிவுமறைவின்றி உங்களுக்குக் கூறலாமா: அவர் இறந்தார், அடக்கம்செய்யப்பட்டார்; அவரது கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கின்றது.
30 எனவே, ' அவர் பாதாளத்தில் விடப்படவில்லை ' என்றும், ' அவர் உடல் அழிவு காணவில்லை ' என்றும் அவர் கூறியது,
31 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்தேயாகும். ஏனெனில் தாவீது இறைவாக்கினரானதால், அவர்வழித் தோன்றல் ஒருவர் அவருடைய அரியணையில் அமர்வார் என்று கடவுள் ஆணையிட்டு உறுதியாகக் கூறியதை அவர் அறிந்திருந்தார்.
32 இந்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகள்.
33 இங்ஙனம், கடவுளின் வல்லமையால் உயர்த்தப்பெற்ற இவர், வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியைத் தந்தையிடமிருந்து பெற்று, நீங்கள் இப்பொழுது காண்பதும் கேட்பதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
34 வானகத்திற்கு ஏறிச்சென்றவர் தாவீதல்லர்; ஏனெனில், அவரே கூறுகிறார்:
35 ' ஆண்டவர் என் ஆண்டவரிடம்: நாம் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் எம் வலப்பக்கத்தில் அமரும் என்றார். '
36 "எனவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக ஆக்கினார் என்பதை இஸ்ராயேல் குலத்தவரெல்லாம் உறுதியாக அறிந்துகொள்வார்களாக."
37 இதைக் கேட்டு, அவர்கள் உள்ளம்குத்துண்டவர்களாய், இராயப்பரையும் மற்ற அப்போஸ்தலர்களையும் நோக்கி, "சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று வினவினார்கள்.
38 அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.
39 ஏனெனில், இறைவன் தந்த வாக்குறுதி உங்களுக்குரியதே; ஏன், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள எல்லாருக்கும், நம் கடவுளாகிய ஆண்டவர் அழைக்கும் ஒவ்வொருவருக்குமே உரியது" என்றார்.
40 இன்னும், அவர் பல ஆதாரங்களைக் காட்டி, சாட்சியங்கூறி, "நெறிகெட்ட இத்தலைமுறையிலிருந்து நீங்கி, உங்களை மீட்டுக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
41 அவருடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். இவ்வாறு, அன்று ஏறத்தாழ மூவாயிரம் பேர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
42 இவர்கள் அப்போஸ்தலர்களின் படிப்பினையைக் கேட்பதிலும், நட்புடன் உறவாடுவதிலும், அப்பம் பிட்குதலிலும், செபிப்பதிலும் நிலைத்திருந்தார்கள்.
43 அற்புதங்கள், அருங்குறிகள் பல அப்போஸ்தலர்கள்வழியாய் நடைபெற்றன; இதனால் மக்களிடையே அச்சம் நிலவியது.
44 விசுவசித்தவர்கள் எல்லாரும் ஒருமித்துத் தங்கள் உடைமைகள் அனைத்தையும் பொதுப்பொருளாய்க் கொண்டிருந்தார்கள்.
45 நிலபுலங்களையும் உடைமைகளையும் விற்று, அவரவர் தேவைக்கேற்ப எல்லாரும் பங்கிட்டுக்கொண்டனர்.
46 நாடோறும் தவறாமல் ஒரே மனதாய்க் கோயிலில் கூடினர்; வீடுகளில் அப்பத்தைப்பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் உணவைப் பகிர்ந்துகொண்டனர்.
47 இங்ஙனம் கடவுளைப் புகழ்ந்துவந்தனர்; மக்கள் அனைவருக்கும் வேண்டியவர்களாய் விளங்கினர். ஆண்டவரும் மீட்புப்பெறுவோரை நாள்தோறும் அவர்களோடு சேர்த்து வந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×