Bible Versions
Bible Books

Exodus 25 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 ஆண்டவர் மோயீசனை நோக்கித் திருவாக்கருளினதாவது:
2 இஸ்ராயேல் மக்கள் நமக்குப் புதுப்பலனின் காணிக்கையைக் கொடுக்கச் சொல். மன நிறைவோடு எதைக் கொண்டு வந்தாலும் அதை நமக்காக வாங்கிகொள்.
3 நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டியவையாவன: பொன், வெள்ளி, வெண்கலம்,
4 இளநீல நூல், கருஞ்சிவப்பு நூல், இருமுறை சாயம் தோய்த்த கட்டிச் சிவப்பு நூல், மெல்லிய பஞ்சு நூல்,
5 வெள்ளாட்டு மயிர்' சிவப்பு தோய்ந்த ஆட்டுக்கிடாய்த் தோல், ஊதாவாக்கப்பட்ட தோல்,
6 சேத்தீம் மரம்' விளக்குகள், அவற்றுக்கு ஊற்ற எண்ணெய், அபிசேகத்தைலத்துக்கு ஏற்ற பரிமளங்கள், தூபத்துக்கு நறுமண வாசனைப் பொருட்கள்'
7 எப்போத் என்னும் மேலாடையிலும் இரசியோனால் என்னும் மார்ப்பதக்கத்திலும் பதித்து வைக்கும் கோமேதகக் கற்கள், இரத்தினங்கள் ஆகியவைகளேயாம்.
8 அவர்கள் நடுவிலே நாம் தங்கியிருக்க நமக்கு ஓர் ஆசாரக் கூடாரத்தை அமைக்கக்கடவார்கள்.
9 நாம் உனக்குக் காண்பிக்கும் ஆசாரக் கூடாரத்தின் மாதிரிப்படி அதை அமைக்க வேண்டும். மேலும், நாம் உனக்குக் காட்டும் எல்லாத் தட்டுமுட்டுப் பாத்திரங்களின் மாதிரிப்படி தெய்வ ஆராதனைக்கு வேண்டி பொருட்களைத் தயார் செய்வார்களாக. அதாவது,
10 சேத்தீம் மரங்களால் ஒரு பெட்டகத்தைச் செய்யுங்கள். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாய் இருக்கட்டும்.
11 அதை உள்ளும் புறமும் பசும் பொன்னால் மூடி, அதன் மேல் சுற்றிலும் இலங்கும் தங்க முடியைப் போல் செய்து வைப்பாயாக.
12 நான்கு பொன் வளையங்களைச் செய்து, பெட்டகத்தின் நான்கு மூலைகளிலும் பொருத்துவாய். பக்கத்திற்கு இரண்டாக இரு பக்கங்களிலும் அவற்றை வைப்பாய்.
13 சேத்தீம் மரங்களால் தண்டுகளைச் செய்து தங்கத்தால் மூடி,
14 அந்தத் தண்டுகளால் பெட்டகத்தைத் தூக்கும்படி அதன் வெளியே இருக்கும் வளையங்களிலே மாட்டக்கடவாய்.
15 தண்டுகள் எப்போதும் வளையங்களில் இருக்க வேண்டுமே தவிர ஒருக்காலும் அவற்றினின்று கழற்றப்படக் கூடாது.
16 நாம் உனக்கு அறிவிக்கப் போகிற சாட்சிச் சட்டத்தைப் பெட்டகத்திலே வைப்பாய்.
17 பசும் பொன்னால் இரக்கத்தின் அரியணையையும் செய்வாய். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமுமாய் இருக்கவேண்டும்.
18 பொன் தகட்டால் இரண்டு கேருபிம் செய்து மூலத்தானத்தின் இரு புறமும் வைக்கக்கடவாய்.
19 பக்கத்திற்கு ஒன்றாக அவற்றை இருபக்கமும் வைக்கக்கடவாய்.
20 அந்தக் கேருபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையையும் கடவுள் பேசும் மூலத்தானத்தையும் மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர் முகமுள்ளவைகளுமாய் இருப்பனவாக.
21 நாம் உனக்கு அளிக்கவிருக்கிற சாட்சிச் சட்டத்தை அதிலே வைப்பாய். அங்கிருந்தே நாம் கட்டளையிடுவோம்.
22 இரக்கத்தின் அரியணை மீதும் சாட்சியப் பெட்டகத்தின் மேல் நிற்கிற இரு கேருபிம் நடுவிலும் (இருந்து) நாம் இஸ்ராயேல் மக்களுக்கான நம் கட்டளைகளையெல்லாம் உன்னிடம் சொல்வோம்.
23 மேலும், சேத்தீம் மரத்தினாலே ஒரு மேசையையும் செய்வாய். அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்க வேண்டும்.
24 அதைப் பசும்பொன்னால் மூடி, அதைச் சுற்றிலும் பொன்னால் திரணை அமைத்து,
25 அதற்கு நான்கு விரற்கிடையான ஒரு சட்டத்தை வெட்டுவேலையாகச் செய்து, அதற்குமேல் பொன்னால் மற்றொரு திரணையையும் அமைப்பாய்.
26 நான்கு பொன் வளையங்களையும் செய்து, அம்மேசையின் நான்கு மூலைகளிலே ஒரு காலுக்கு ஒன்றாக அவற்றைப் பொருத்துவாய்.
27 மேசையைத் தூக்கும்படியாக மேற்சொன்ன சட்டத்துக்குக் கீழே அந்தப் பொன்வளையங்கள் தண்டுகளுக்கு நுழைவிடங்களாய் இருக்கும்.
28 மேசையைத் தூக்குவதற்குரிய அந்தத் தண்டுகளையும் சேத்தீம் மரங்களால் செய்து பொன்னால் மூடுவாய்.
29 பானப்பலிக்குத் தேவையான தட்டுக்களையும் குப்பிக் கரகங்களையும் தூபக் கலசங்களையும் கிண்ணங்களையும் பத்தரை மாற்றுப் பசும் பொன்னால் செய்யக்கடவாய்.
30 எப்பொழுதும் காணிக்கை அப்பங்களை நமது முன்னிலையில் (அம்) மேசையின் மீது வைப்பாய்.
31 மேலும், பசும்பொன் தகட்டினால் ஒரு குத்து விளக்கையும் செய்வாய். அதனின்று, கிளம்பும் தண்டும் கிளைகளும் மொக்குகளும் குமிழ்களும் லீலி மலர்களும் அப்படியே அடிப்பு வேலையாகச் செய்யப்படும்.
32 பக்கத்திற்கு மூன்றாக ஆறு கிளைகள் (அதன்) பக்கங்களினின்று கிளம்பும்.
33 ஒரு கிளையிலே வாதுமைக் கொட்டை போன்ற மூன்று மொக்குகளும் ஒரு குமிழும் ஒரு லீலி மலரும் இருக்கும். மற்ற கிளைகளிலும் அவ்விதமே இருக்க வேண்டும். விளக்குத் தண்டிலிருந்து கிளம்பும் ஆறு கிளைகளும் ஒரே மாதிரியாகச் செய்யப்படும்.
34 குத்துவிளக்கிலோ வாதுமைக் கொட்டை போன்ற நான்கு மொக்குகளும், இவை ஒவ்வொன்றிலும் ஒரு குமிழும் லீலி மலரும் இருக்கும்.
35 இரண்டு கிளைகளின் கீழே ஒவ்வொன்றிலும் மும்மூன்று குமிழ்களாக ஆறு குமிழ்களும் ஒரே தண்டிலிருந்து கிளம்பும்.
36 ஆகையால், குமிழ்களும் கிளைகளும் பத்தரை மாற்றுத் தங்கத் தகட்டினாலே செய்யப்பட்டுக் குத்துவிளக்கினினறு வெளியே வரும்.
37 ஏழு அகல்களையும் செய்து, எதிரெதிராய் எரியும்படி குத்து விளக்கின் மேல் வைப்பாய்.
38 மேலும், கத்திரிகளும், திரிச் சாம்பலை வைக்கத்தக்க கலசங்களும், மிகப் பசும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.
39 அதையும் அதற்குரிய பணிமுட்டுக்கள் யாவையும் ஒரு தாலந்துப் பசும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.
40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரிப்படியே (இவையெல்லாம்) செய்யக் கவனமாயிருப்பாயாக.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×