Bible Versions
Bible Books

Exodus 30 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 மேலும், வாசனைப் பொருட்களை எரிப்பதற்காக ஒரு பீடத்தையும் சேத்தீம் மரத்தினால் செய்வாய்.
2 அது ஒருமுழ நீளமும் ஒருமுழ அகலமுமான சதுரமாயும், இரண்டு முழ உயரமாயும் இருக்கவேண்டும். அதன் மூலைகளில் கொம்புகள் இருக்கும்.
3 சல்லடை போல் இருக்கும் மேற்புறத்தையும், சுற்றுப் புறங்களையும், அதன் கொம்புகளையும் பசும் பொன்னால் திரணையை அமைப்பதுமன்றி,
4 விளிம்பின் கீழே பீடத்தின் இரண்டு பக்கத்திலும் இரண்டு பொன் வளையங்களையும் அமைப்பாய். அவை பீடத்தைத் தூக்குவதற்கான தண்டுகளின் நுழைவிடங்களாய் இருக்கும்.
5 அத்தண்டுகளையும் சேத்தீம் மரத்தினால் செய்து பொன்னால் மூடுவாய்.
6 பீடத்தையோ நாம் உன்னோடு பேசத் தீர்மானித்திருக்கிற சாட்சியப் பெட்டகத்தை மூடும் இரக்கத்தின் அரியணைக்கு முன்னும், சாட்சியப் பெட்டகத்திற்கு எதிரேயுள்ள தொங்கு திரைக்கு முன்பாகவும் வைக்கக்கடவாய்.
7 ஆரோன் அதன்மேல் நறுமணம் கமழும் தூபம் காட்டுவான். காலையில் விளக்குகளைத் தயார் செய்யும் நேரத்தில் தானே தூபம் காட்டுவான்.
8 மாலையில் அவற்றை ஏற்றும் நேரத்திலே உங்கள் தலைமுறை தோறும் எப்போதும் ஆண்டவர் திருமுன் வாசனைப் பொருட்களைச் சுட்டெரிக்கக்கடவான்.
9 நீங்கள் வேறு விதமாய்ச் சேர்க்கப்பட்ட நறுமண தூபங்களையேனும், காணிக்கையையேனும், பலியையேனும் அந்தப் பீடத்தின் மேல் ஒப்புக்கொடுக்கவும் வேண்டாம்; அதிலே பானப் பலிகளை ஊற்றவும் வேண்டாம்.
10 ஆண்டிற்கு ஒருமுறை ஆரோன் பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தினால் அதன் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்வான். உங்கள் தலைமுறைதோறும் அதன்மேல் பரிகாரம் செய்வான். அது ஆண்டவருக்குப் பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதாம் என்றருளினார்.
11 ஆண்டவர் மேலும் மோயீசனுக்குத் திருவுளம்பற்றினதாவது:
12 நீ இஸ்ராயேல் மக்களின் தொகையைக் கணக்கெடுக்கும் போது, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் வேளையிலே தன் தன் உயிரைக் குறித்து ஆண்டவருக்கு மீட்புப் பணத்தைக் கொடுப்பான். அவர்கள் எண்ணப்படும் போது அவர்களுக்கு ஒரு வாதையும் உண்டாகாது.
13 எண்ணப்படுகிறவர்களில் ஒவ்வொருவனும் பரிசுத்த இடத்துச் சீக்கல் கணக்கின்படி அரைச்சீக்கல் செலுத்தக்கடவான். ஒரு சீக்கலுக்கு இருபது ஒபோல். ஆண்டவருக்குச் செலுத்தப்படுவது அரைச்சீக்கலே.
14 முதலில் எண்ணப்படுகிறவர்களுள் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் அதை ஆண்டவருக்குச் செலுத்தக்கடவார்கள்.
15 செல்வம் படைத்தவன் அரைச்சீக்கலுக்கு அதிகமாயும், வறியவன் அதற்குக் குறைவாயும் செலுத்தவேண்டாம்.
16 நீயோ இஸ்ராயேல் மக்களிடத்திலே அந்தப் பணத்தை வாங்கி, ஆண்டவர் திருமுன் அவர்கள் நினைவு இருக்கும் பொருட்டும், அவர்கள் ஆன்மாக்களுக்குப் பாவப்பரிகாரமாகவும் அதை ஆசாரக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாய் என்றார்.
17 ஆண்டவர் மேலும் மோயீசனை நோக்கி:
18 கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும் அதன் பாதத்தையும் செய்து, ஆசாரக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் நடுவே வைத்து அதில் தண்ணீர் வார்த்த பிறகு,
19 அதினின்று ஆரோனும் அவன் புதல்வர்களும் தங்கள் கைகால்களைக் கழுவக் கடவார்கள்.
20 அவர்கள் சாட்சியக் கூடாரத்திற்குள் புகும் போதும், ஆண்டவருக்குத் தூப வகைகளை ஒப்புக் கொடுக்கும்படி பலிப்பீடத்திற்கு வரும் போதும் கைகால்களை அவ்விதமே கழுவாவிட்டால்,
21 ஒருவேளை சாவார்கள். இது தலைமுறை தோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியாருக்கும் நித்திய சட்டமே என்றருளினார்.
22 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
23 சிறந்த பரிமள வகைகளாகிய முதல் தரத்துத் தூய வெள்ளைப் போளத்தில் ஜந்நூறு சீக்கல் எடையும், கருவாப் பட்டையில் அதில் பாதியாகிய இருநூற்றைம்பது சீக்கல் எடையும், நறுமண வசம்பிலே இருநூற்றைம்பது சீக்கல் எடையும்,
24 இலவங்கப் பட்டையிலே பரிசுத்த இடத்து நிறையின்படி ஜந்நூறு சீக்கல் எடையும், கின் என்னும் படிக்கு ஒருபடி ஒலிவ எண்ணெயும் எடுத்து,
25 அவற்றால் நறுமண எண்ணைய் தயாரிப்போர் செய்வது போல், நீ திரு அபிசேகத்திற்குரிய கூட்டுத் தைலம் தயாரிக்கக்கடவாய்.
26 அதைக்கொண்டு சாட்சியக் கூடாரத்தையும், உடன்படிக்கைப் பெட்டகத்தையும்,
27 மேசையையும், பாத்திரங்களையும், குத்துவிளக்கையும், அதைச் சார்ந்த பணிமுட்டுக்களையும், தூப வகைகளின் பீடத்தையும், தகனப் பலிப்பீடத்தையும்,
28 அவைகளுக்கடுத்த எல்லாத் தட்டு முட்டுக்களையும் அபிசேகம் செய்து,
29 அவை எல்லாவற்றையும் பரிசுத்தப் படுத்துவாய். அவை அனைத்தும் அவ்வாறே மிகப் பரிசுத்த பொருட்களானபடியால் அவைகளைத் தொடுவோர் பரிசுத்தமாவார்.
30 ஆரோனும் அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்யும்படிக்கு நீ அவர்களை அபிசேகம் செய்து பரிசுத்தப் படுத்துவாயாக.
31 அன்றியும், இஸ்ராயேல் மக்களோடு பேசி: இது உங்கள் தலைமுறைதோறும் நமக்கு உரித்தான பரிசுத்த அபிசேகத் தைலமாய் இருக்கும் என்பாய்.
32 இது மனிதன் உடலின்மேல் பூசப்படவும், இது கூட்டப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும் கூடாது. ஏனென்றால், இது பரிசுத்தமானது; உங்களுக்கும் பரிசுத்த பொருள் ஆகவேண்டும்.
33 இதற்குச் சரிநிகரான தைலத்தைக் கூட்டுபவன் அல்லது அதிலிருந்து எடுத்து அந்நியனுக்குக் கொடுப்பவன் தன் இனத்தினின்று விலக்குண்டு போவான் என்றார்.
34 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: பரிமள வகைகளாகிய வெள்ளைப்போளத்தையும், குங்கிலியத்தையும், நல்ல மணமுள்ள கல்பான் பிசினையும், மிகத் தூய்மையான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,
35 தைலக்காரர் வேலை செய்யும் முறையின்படி மேற்படிப் பொருட்களைக் கவனத்துடன் கூட்டித் திருப் பொருளாவதற்குரிய தூய தூப வகைகளைச் செய்யக்கடவாய்.
36 அதில் சிறிது எடுத்துப் பொடிப் பொடியாக இடித்து, நாம் உனக்குக் காட்சியளிக்கும் இடமாகிய சாட்சியக் கூடாரத்துக்கு முன் வைக்கக் கடவாய். அது உங்களுக்கு மிகப் பரிசுத்த பரிமளமாகும்.
37 உங்கள் செலவுக்கென்று இதற்கு ஒப்பானதை நீங்கள் செய்து கொள்ளலாகாது. ஏனென்றால், ஆண்டவருக்கென்றே அது கூட்டப்பட்டது.
38 அதன் மணத்தை முகரும் பொருட்டு அதற்கு ஒப்பானதைச் செய்திருப்பவன் தன் இனத்தினின்று விலக்குண்டு போவான் என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×