Bible Versions
Bible Books

Matthew 18 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அந்நேரத்தில் சீடர் இயேசுவை அணுகி, "விண்ணரசில் யார் பெரியவன்?" என்று கேட்டனர்.
2 இயேசு ஒரு குழந்தையை அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி,
3 கூறியதாவது: "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்.
4 எனவே, இக்குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன்.
5 "மேலும் இத்தகைய குழந்தை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன் எவனும், என்னையே ஏற்றுக்கொள்கிறான்.
6 ஆனால் என்மீது விசுவாசம்கொள்ளும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவன் கழுத்தில் பெரிய எந்திரக் கல்லைத் தொங்கவிட்டு நடுக்கடலில் அவனை ஆழ்த்தி விடுவது அவனுக்கு நலம்.
7 இடறல் நிமித்தம் உலகிற்கு ஐயோ கேடு! ஏனெனில், இடறல் வந்தே தீரும். ஆனால், யாரால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ கேடு!
8 "உன் கையாவது காலாவது உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டி எறிந்துவிடு. இரண்டு கைகளோடு அல்லது இரண்டு கால்களோடு முடிவில்லா நெருப்பில் தள்ளப்படுவதைவிட, கை ஊனனாய் அல்லது கால் முடவனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.
9 உன் கண் உனக்கு இடறலாய் இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடு. இரண்டு கண்களோடு எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.
10 "இச்சிறுவருள் ஒருவனையும் புறக்கணியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11 அவர்களுடைய விண்ணுலகத் தூதர் வானகத்திலுள்ள என் தந்தையின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
12 "இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்க, அவற்றுள் ஒன்று வழி தவறிப்போனால் தொண்ணுற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டுத் தவறிப்போனதைத் தேடிச்செல்வான். அன்றோ?
13 அதைக் கண்டுபிடிக்க நேர்ந்தால், தவறிப்போகாத தொண்ணுற்றொன்பது ஆடுகளைப் பற்றி அவன் கொள்ளும் மகிழ்ச்சியைவிட, அவ்வொன்றைப்பற்றி அவன் கொள்ளும் மகிழ்ச்சி பெரிதாம் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14 அவ்விதமே, இச்சிறுவருள் ஒருவன்கூட அழிவுறுவது வானகத்தில் உள்ள உங்கள் தந்தையின் விருப்பமன்று.
15 "உன் சகோதரன் உனக்கு எதிராகக் குற்றஞ்செய்திருந்தால் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவனைக் கண்டித்துப்பார். அவன் உனக்குச் செவிசாய்த்தால் உன் சகோதரனை உன்வச மாக்கிக்கொள்வாய்.
16 அவன் உனக்குச் செவிசாய்க்காவிட்டால், உன்னுடன் ஒருவர் அல்லது இருவரைச் சேர்த்துக்கொள். 'இவ்வாறு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் சொற்படி காரியம் எல்லாம் தீரும்.'
17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம், சொல். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில், அவன் உனக்குப் புற இனத்தான் போலவும் ஆயக்காரன்போலவும் இருக்கட்டும்.
18 "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் கட்டுவீர்களோ, அதெல்லாம் விண்ணுலகிலும் கட்டப்பட்டதாகவே இருக்கும். மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் அவிழ்ப்பீர்களோ, அதெல்லாம் விண்ணுலகிலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்.
19 "மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: மண்ணுலகில் உங்களில் இருவர் தாங்கள் கேட்கும் எதைக்குறித்தும் மனமொத்திருந்தால் அது விண்ணுலகிலுள்ள என் தந்தையால் அவர்களுக்கு அருளப்படும்.
20 இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."
21 பின்னர், இராயப்பர் அவரை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு எதிராகக் குற்றஞ் செய்துவந்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறைவரைக்குமா?" என்று கேட்டார்.
22 அதற்கு இயேசு கூறியதாவது: "ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்.
23 "ஆகவே விண்ணரசு, தன் ஊழியரிடம் கணக்குக் கேட்க விரும்பிய ஓர் அரசனுக்கு ஒப்பாகும்.
24 கணக்குக் கேட்கத் தொடங்கிய பொழுது, அவனிடம் பத்தாயிரம் 'தாலாந்து' கடன்பட்ட ஒருவனைக் கொண்டுவந்தனர்.
25 அவன் கடன் தீர்க்க வகையற்றிருந்ததால், அவனையும் அவன் மனைவி மக்களையும் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் விற்றுக் கடனைத் தீர்க்குமாறு தலைவன் கட்டளையிட்டான்.
26 அவ்வூழியனோ அவன் காலில் விழுந்து, 'பொறுத்துக்கொள்ளும்; கடன் எல்லாம் தீர்த்துவிடுகிறேன்' என்று வேண்டினான்.
27 அவ்வூழியனுடைய தலைவன் மனமிரங்கி அவன் கடனை மன்னித்து அவனை விட்டுவிட்டான்.
28 அவ்வூழியன் வெளியே சென்றதும், தன் உடனூழியரில் தன்னிடம் நூறு வெள்ளிக்காசு கடன்பட்ட ஒருவனைக் கண்டான். அவனைப் பிடித்துக் கழுத்தை நெரித்து, 'நீ பட்ட கடனைத் தீர்த்துவிடு' என்று கேட்டான்.
29 அந்த உடனூழியன், காலில் விழுந்து, 'பொறுத்துக்கொள்ளும்; எல்லாம் தீர்த்துவிடுகிறேன்' என்று அவனை வேண்டினான்.
30 அவனோ இணங்கவில்லை. ஆனால், கடனைத் தீர்க்குமட்டும் அவனைச் சிறையில் அடைத்தான்.
31 அவனுடைய உடனூழியர் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தித் தலைவனிடம் சென்று நடந்ததை யெல்லாம் அறிவித்தனர்.
32 அப்போது, அவனுடைய தலைவன் அவனை அழைத்து, 'கெட்ட ஊழியனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் உன் கடனையெல்லாம் மன்னித்தேன்.
33 ஆகவே, நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல, நீயும் உன்னுடைய உடனூழியனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?' என்று கேட்டு,
34 சினந்து, கடன் முழுவதும் தீர்க்கும்வரை வதைப்போரிடம் அவனைக் கையளித்தான்.
35 உங்களுள் ஒவ்வொருவனும் தன் சகோதரனை முழு உள்ளத்தோடு மன்னிக்காவிட்டால், என் வானகத் தந்தையும் அவ்வாறே உங்களுக்குச் செய்வார்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×