Bible Versions
Bible Books

Haggai 1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 தாரியுஸ் மன்னனின் இரண்டாம் ஆட்சியாண்டில் ஆறாம் மாதத்தின் முதல் நாளன்று, யூதாவின் ஆளுநன் சலாத்தியேலின் மகனாகிய சொரொபாபெலுக்கும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவுக்கும் இறைவாக்கினர் ஆகாய் வாயிலாய் அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
2 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவருடைய இல்லத்தை மீண்டும் எழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்ந மக்கள் சொல்லுகிறார்கள்."
3 அப்போது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாய் ஆண்டவருடைய வாக்கு அருளப்பட்டது:
4 இந்த இல்லம் பாழாய்க் கிடக்கும் போது, நீங்கள் மட்டும் மாடமாளிகைகளில் குடியிருப்பதற்குரிய காலம் வந்து விட்டதோ?
5 ஆதலால் இப்பொழுது சேனைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: உங்களுக்கு நேர்ந்தவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.
6 நீங்கள் விதைத்ததோ மிகுதி, அறுத்ததோ கொஞ்சந்தான்; நீங்கள் உண்ணுகிறீர்கள், ஆனால் வயிறு நிரம்புகிறதில்லை; நீங்கள் நீர் அருந்துகிறீர்கள், ஆயினும் தாகம் தணிவதில்லை; நீங்கள் உடுத்திக் கொள்ளுகிறீர்கள், ஆயினும் குளிர் விட்டபாடில்லை; கூலி வாங்குகிறவனும் வாங்கிய கூலியைப் பொத்தலான பையிலேயே போட்டு வைக்கிறான்.
7 உங்களுக்கு நேர்ந்தவற்றைச் சிந்தித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
8 மலைகளுக்குப் போய், மரங்கள் கொண்டுவாருங்கள், கோயில் கட்டுங்கள்; அங்கே நாம் மகிழ்ச்சியுடன் குடி கொள்வோம், மகிமை பெறுவோம், என்கிறார் ஆண்டவர்.
9 மிகுதியாய்க் கிடைக்கும் என்று நீங்கள் காத்திருந்தீர்கள், ஆனால் கொஞ்சந்தான் கிடைத்தது; நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்த போது, அதையும் நாம் ஊதிவிட்டோம். ஏன் தெரியுமா? ஏனெனில் நமது இல்லம் பாழாகிக் கிடக்கும் போது, உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் வீட்டின் மேல் கருத்தாய் இருக்கிறான்.
10 ஆதலால் தான் வானமும் உங்கள் மேல் மழை பெய்யாமல் நிறுத்திவிட்டது: நிலமும் தன் விளைவைக் கொடுக்க மறுத்தது.
11 மேலும், நாட்டின் மீதும் மலைகள் மீதும் கோதுமை மீதும் புதிய திராட்சை இரசத்தின் மீதும் எண்ணெய் மீதும், நிலம் விளைவிப்பது அனைத்தின் மீதும், மனிதர் மீதும் கால்நடைகள் மீதும், உழைப்பின் பலன் எல்லாவற்றின் மேலும் வறட்சியை வரச்செய்திருக்கின்றோம்."
12 அப்பொழுது, சலாத்தியேலின் மகன் சொரொபாபெலும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தவர் யாவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாயின் வார்த்தைகளுக்கும் செவிமடுத்தனர்; மக்களோ ஆண்டவரின் திருமுன் அஞ்சினர்.
13 அப்போது ஆண்டவரின் தூதுவரான ஆகாய் மக்களிடத்தில் பேசி, " நாம் உங்களோடு இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்" என்னும் ஆண்டவருடைய தூதுரையை அவர்களுக்கு அறிவித்தார்.
14 அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநன் சலாத்தியேலின் மகனான சொரொபாபெலின் உள்ளத்தையும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவின் உள்ளத்தையும், மக்களுள் எஞ்சியிருந்தவர்கள் அனைவருடையவும் உள்ளத்தையும் கிளர்ந்தெழும்படி செய்தார்; அவர்களும் கிளம்பித் தங்கள் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்கள்.
15 (14) அன்று ஆறாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×