Bible Versions
Bible Books

2 Kings 25 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 செதேசியாசினுடைய ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில் பபிலோனிய அரசன் நபுக்கொதொனோசோர் தன் படையனைத்துடனும் யெருசலேமுக்குப் படையெடுத்து வந்து அதை முற்றுகையிட்டு அதைச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டினான்.
2 அவ்வாறே செதேசியாசு அரசனுடைய ஆட்சியின் பதினோராம் ஆண்டின் நான்காம் மாதத்தின் ஒன்பதாம் நாள்வரை நகர் முற்றுகையிடப்பட்டு, கொத்தளங்களால் சூழப்பட்டிருந்தது.
3 இதனால் நகரில் பஞ்சம் நிலவிற்று. நாட்டு மக்களுக்கு உணவு இல்லை.
4 அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு செய்யப்பட்டது. கல்தேயர்கள் நகரைச் சுற்றியிருக்க, படைவீரர்கள் எல்லாரும் அரசனின் தோட்டத்தினருகே உள்ள இரண்டு மதில்களுக்கும் நடுவிலுள்ள வாசலின் வழியாய்த் தப்பியோடினர். அரசன் செதேசியாசோ பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பியோடினான்.
5 கல்தேயரின் படையினர் அரசனைப் பின்தொடர்ந்து எரிக்கோ நகரின் சமவெளியில் அவனைப் பிடித்தனர். அவனோடு இருந்த போர்வீரர் அனைவரும் அவனைத் தனியே விட்டுவிட்டுச் சிதறியோடி விட்டனர்.
6 அவர்கள் அரசனைப் பிடித்து, ரெப்ளாத்தாவில் தங்கியிருந்த பபிலோனிய அரசனிடம் கூட்டி வந்தனர். அவன் செதேசியாசுக்கு எதிராய்த் தீர்ப்பிட்டான்.
7 செதேசியாசின் புதல்வர்களை அவனது கண் முன்னே வெட்டினான்; மேலும் அவன் இரு கண்களையும் பிடுங்கிய பின், விலங்கிட்டு அவனைப் பபிலோன் நகருக்குக் கொண்டு சென்றான்.
8 பிறகு நபுக்கொதொனோசோருடைய ஆட்சியின் பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளில் பபிலோனிய அரசனின் ஊழியனும் படைத்தலைவனுமான நபுசர்தான் யெருசலேமுக்கு வந்தான்.
9 ஆண்டவரின் ஆலயத்தையும் அரச அரண்மனையையும் யெருசலேமில் உள்ள கட்டடங்களையும், எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்.
10 அப்படைத்தலைவனுடன் வந்திருந்த கல்தேயரின் படையினர் எல்லாரும் யெருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்து வீழ்த்தினர்.
11 நகரில் எஞ்சியிருந்த மக்களையும் ஒளித்து ஓடிப் பபிலோனிய அரசனிடம் சரணடைந்திருந்தவர்களையும் மற்றச் சாதாரண மக்களையும் படைத்தலைவன் நபுசர்தான் கைதிகளாகக் கொண்டு போனான்.
12 திராட்சைச் தோட்டக்காரர், உழவர் போன்ற ஏழை எளியோரை அவன் அங்கேயே விட்டு வைத்தான்.
13 கல்தேயர்கள் ஆலயத்திலிருந்த பித்தளைத் தூண்களையும், பித்தளைக் கடலையும், அதன் தாங்கிகளையும் உடைத்து அவற்றின் பித்தளை முழுவதையும் பபிலோனுக்குக் கொண்டு போனார்கள்.
14 செப்புப் பானைகளையும் அகப்பைகளையும் முட்கரண்டி, கிண்ணங்களையும், கலயங்களையும், ஆலயத்தில் பயன்படும் ஏனைய பித்தளைப் பாத்திரங்களையும் கூட எடுத்துச் சென்றனர்.
15 மேலும், படைத்தலைவன் பொன்னாலும் வெள்ளியாலுமான தூபக்கலசங்களையும் கோப்பைகளையும், பொன், வெள்ளியாலான பொருட்கள் எல்லாவற்றையுமே எடுத்துச் சென்றான்.
16 சாலமோன் ஆண்டவரின் ஆலயத்தில் செய்து வைத்திருந்த இரண்டு தூண்களையும், ஒரு கடலையும் அதன் தாங்கிகளையும் கொண்டு போனான். அவன் எடுத்துச் சென்ற எல்லாப் பாத்திரங்களையும் செய்யப் பயன்பட்டிருந்த பித்தளையின் நிறை இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாது.
17 ஒவ்வொரு தூணும் பதினெட்டு முழ உயரமுடையது. பித்தளையாலான அதன் மேற்பாகம் மூன்று முழ உயரமுடையது. அத்தூணின் மேற்பாகத்தில் மாதுளம் பழம் போன்ற வேலைப்பாடுகள் கொண்ட வலையும் இருந்தது. அவை எல்லாம் பித்தளையால் செய்யப்பட்டவை. இரண்டாம் தூணிலும் அவ்விதமான சித்திர வேலைப்பாடுகள் இருந்தன.
18 அன்றியும், படைத்தலைவன் தலைமைக் குரு சராயியாசையும் உதவிக் குரு செப்போனியாசையும் மூன்று வாயிற் காவலர்களையும் கொண்டு சென்றான்.
19 மேலும், போர்வீரர்கட்குத் தலைவனாயிருந்த அண்ணகன் ஒருவனையும், அரசனின் உற்ற நண்பர்களுள் நகரில் அகப்பட்ட ஐந்து பேரையும், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களைப் போருக்குப் பழக்கிவந்த படைத்தலைவன் சோபேரையும், நகரிலிருந்த சாதாரண மக்களில் அறுபது பேரையும் சிறைப்பிடித்துச் சென்றான்.
20 படைத்தலைவன் நபுசர்தான் அவர்களைப் பிடித்து ரெபிளாத்தாவில் தங்கியிருந்த பபிலோனிய அரசனிடம் கொண்டு போனான்.
21 அவர்களைப் பபிலோனிய அரசன் எமாத் நாட்டிலிருக்கும் ரெபிளாத்தா என்னுமிடத்தில் வெட்டிக் கொன்றான். யூதா மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.
22 மேலும் பபிலோனிய அரசன் நபுக்கொதொனோசோர் சிறைப்பிடிக்காது யூதா நாட்டில் விட்டு வைத்திருந்த மக்களுக்குக் கொதோலியாசைத் தலைவனாக நியமித்தான். இவன் சாபானின் மகனான அகிக்காமின் புதல்வன்.
23 பபிலோனிய அரசன் கொதோலியாசைத் தலைவனாக ஏற்படுத்திய செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் அறிந்தபோது, நாத்தானியாசின் மகன் இஸ்மாயேல், தாரேயின் மகன் யோவான், நெத்தோபாத் ஊரானான தானேயு, மேத்தின் மகன் சராயியா, மவாக்காத்தியின் மகன் எசோனியாசு ஆகியோர் தத்தம் ஆட்களோடு மாஸ்பாவிலிருந்த கொதோலியாசைப் பார்க்க வந்தனர்.
24 கொதோலியாசு அவர்களையும் அவர்களின் ஆட்களையும் நோக்கி, "கல்தேயருக்கு ஊழியம் செய்ய நீங்கள் அஞ்ச வேண்டாம். நாட்டில் இருந்து கொண்டே பபிலோனிய அரசனுக்கு ஊழியம் செய்யுங்கள்; அதுவே உங்களுக்கு நல்லது" என்று ஆணையிட்டுச் சொன்னான்.
25 ஏழுமாதம் சென்று அரச குலத்தில் பிறந்த எலிசாமாவின் மகன் நாத்தானியாசின் புதல்வன் இஸ்மாயேல், பத்து மனிதருடன் மாஸ்பாவுக்கு வந்தான். அவர்கள் கொதோலியாசையும் அவனோடிருந்த யூதரையும் கல்தேயரையும் வெட்டிக் கொன்றனர்.
26 அப்பொழுது மக்கள் யாவரும், பெரியவரும் சிறியவரும், கல்தேயர்களுக்கு அஞ்சித் தங்கள் படைத் தலைவர்களோடு எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.
27 யூதாவின் அரசன் யோவாக்கின் நாடு கடத்தப்பட்ட முப்பத்தேழாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் நாள், பபிலோனிய அரசன் எவில்மெரோதக் அரியணை ஏறின அதே ஆண்டில், யூதாவின் அரசன் யோவாக்கினைச் சிறையிலிருந்து விடுவித்தான்.
28 அவனோடு இரக்கத்துடன் உரையாடி, அவனுக்குப் பபிலோனிலிருந்த மற்ற அரசர்களுக்கு மேல் அதிகாரம் வழங்கினான். அவன் சிறையில் அணிந்திருந்த ஆடைகளை மாற்றச் செய்தான்.
29 அன்றுமுதல் தான் சாகும்வரை யோவாக்கின் அரச பந்தியிலேயே அமர்ந்து உணவருந்தி வந்தான்.
30 யோவாக்கின் தன் வாழ்நாளெல்லாம் அரச கட்டளைப்படி தனக்குத் தேவையானவற்றை நாளும் தடையின்றிப் பெற்று வந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×