Bible Versions
Bible Books

Ezekiel 5 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 மனிதா, மயிரை மழிக்கும் அளவுக்குக் கருக்கான வாளையெடுத்து, அதனால் உன் தலையையும் தாடியையும் மழித்துக் கொண்டு, அந்த மயிரைத் தராசில் இட்டு நிறுத்துப் பங்கிடு.
2 அவற்றில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாட்கள் முடியும் போது நடுப்பட்டணத்தில் நெருப்பினால் சுட்டெரி; மூன்றில் மற்றொரு பங்கைப் பட்டணத்தைச் சுற்றிலும் கத்தியால் வெட்டிச் சிதைப்பாய்; மூன்றில் இன்னுமொரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு; நாம் கையிலேந்திய வாளுடன் அவர்களைப் பின் தொடர்வோம்.
3 அவற்றில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனையில் முடிந்து வை.
4 பிறகு, இவற்றில் கொஞ்சம் எடுத்துத் தீயிலிட்டுச் சுட்டெரிப்பாய்; இதினின்று இஸ்ராயேல் வீட்டாருக்கு எதிராக அக்கினி புறப்படும்."
5 ஆண்டவராகிய இறைவன் அருளிய வாக்கு: "புறவினத்தார்க்கும் மற்ற மக்களுக்கும் நடுவில் நாம் நிலைநாட்டிய யெருசலேம் பட்டணம் இதுவே.
6 புறவினத்தாரை விட மிகுதியாய் இவர்கள் எம் ஒழுங்குச் சட்டங்களை அவமதித்து அக்கிரமிகளானார்கள்; தங்களைச் சுற்றிலுமுள்ள பட்டணத்தாரை விட அதிகமாய் இவர்கள் எம் கட்டளைகளை மீறினார்கள்; எம் சட்டதிட்டங்களைக் காலால் மிதித்தார்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவே இல்லை."
7 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உங்களைச் சுற்றியுள்ள மக்களைக் காட்டிலும் அதிகமாய் நீங்கள் நம் கட்டளைகளை எதிர்த்தீர்கள்; நம்முடைய நீதியையும் அனுசரிக்கவில்லை; உங்களைச் சுற்றியுள்ள மக்களுடைய நீதி முறைமைகளின்படி கூட நீங்கள் நடக்கவில்லை.
8 ஆகவே ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: இதோ, நாமே உங்களுக்கு எதிராக இருப்போம்; புறவினத்தார் பார்க்க உங்கள் நடுவில் இருந்து நாமே உங்களைத் தீர்ப்பிடுவோம்;
9 நீங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், நாம் இதுவரையில் செய்யாததும் இனிச் செய்யாதிருக்கப் போவதுமான காரியத்தை இப்பொழுது செய்யப் போகிறோம்.
10 (அதாவது) உங்களுள் தகப்பன் மகனையும், மகன் தகப்பனையும் பிடுங்கித் தின்பார்கள்; உங்கள் நடுவில் நாம் எழுந்து நின்று தீர்ப்பிட்டு நாற்றிசையிலும் உங்களனைவரையும் சிதறடிப்போம்.
11 உங்களுடைய அக்கிரமங்களாலும், உங்களுடைய குற்றங்களாலும் நமது பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினதால் உங்களைத் தவிடு பொடியாக்குவோம்; கிருபைக் கண்ணோக்க மாட்டோம்; இரக்கமும் காட்ட மாட்டோம்; எம் உயிர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
12 உங்களில் மூன்றிலொரு பங்கு பெருவாரிக் காய்ச்சலாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்; மூன்றில் மற்றொரு பங்கு வாளால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் இறுதியான பங்கு எப்பக்கங்களிலும் சிதறுண்டு போவார்கள்; அவர்களையும் விடாமல் வாளோடு பின்தொடர்வோம்.
13 இவ்வாறு நமது கோபம் நிறைவேறும்; நமது ஆத்திரம் அவர்கள் மீது தீரும்படி செய்து, கோபத்தை ஆற்றிக் கொள்வோம்; நமது கோபம் அவர்கள் மீது நிறைவேறுகையில், ஆண்டவராகிய நாம் வைராக்கியத்தோடு பேசினோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
14 இவ் வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைத் தரைமட்டமாக்குவோம்; உன்னைச் சுற்றியுள்ள யாவருடைய நிந்தைக்கும் உன்னை உட்படுத்துவோம்.
15 கோபத்தின் வேகத்தால் கொடிய தண்டனைகளை நாம் உனக்குக் கொடுத்துத் தண்டித்துத் திருத்தி, நீதி செலுத்த வரும் போது, உன்னைச் சுற்றியுள்ள மக்கள் உன்னை அவமானப்படுத்தி நிந்திப்பார்கள்; அவர்கள் உன்னைப் பார்க்கும் போது நீ கடவுளின் கோபத்திற்கு இலக்காக இருக்கிறாய் எனக் கண்டு கலங்கி நிற்பார்கள்.
16 உங்களை அடியோடு அழிக்கும்படி கொடிய பஞ்சமாகிய அழிவின் அம்பை உங்கள் மீது எய்து சிதறடிப்போம்; நீங்கள் பட்டினியால் சாகும்படி அப்பத்தின் சேமிப்பாகிய உங்கள் ஊன்று கோலை நாம் முறித்துப் போடுவோம்; ஆண்டவராகிய நாம் இதை முன்னே சொல்லுகிறோம்.
17 உங்கள் பிள்ளைகளைக் கொன்றெழிக்கப் பஞ்சத்தையும், கொடிய மிருகங்களையும் பெருவாரிக் காய்ச்சலையும் உங்கள் மேல் அனுப்புவோம்; எங்கும் இரத்த வெள்ளம் புரண்டோடும்; வாளாலே வெட்டுண்டு நீங்கள் சாவீர்கள்; ஆண்டவராகிய நாம் இதைச் சொல்லுகிறோம்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×