Bible Versions
Bible Books

Daniel 12 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 "அக்காலத்தில், உன் இனத்தார்க்குக் காவலராக சேனைத் தலைவரான மிக்கேல் எழும்புவார்; மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்; அக்காலத்தில் உன் இனத்தார் தப்பித்துக் கொள்வர்: யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.
2 இறந்து போய் மண்ணில் உறங்குகிற பலருள் சிலர் முடிவில்லா வாழ்வடைவதற்கும், சிலர் முடிவில்லா இழிவுக்கும் நிந்தைக்கும் ஆளாவதற்கும் எழுந்திருப்பார்கள்.
3 ஞானிகள் வானத்தின் ஒளியைப் போலும், பலரை நல்வழியில் திருப்பியவர்கள் விண்மீன்களைப் போலவும் என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் பட்டொளி வீசுவார்கள்.
4 தானியேலே, நீ குறித்த காலம்வரை இந்த வார்த்தைகளை மூடி வைத்து இந்த நூலை முத்திரையிட்டு வை; பலர் அதைப் படிப்பார்கள்; அறிவு பெருகும்."
5 அப்போது தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும், அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைக் கண்டேன்.
6 அப்போது நான், மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்றுத் தண்ணிரின் மேல் நின்ற அந்த மனிதரை நோக்கி, "இந்த விந்தைகள் எப்போது முடிவுக்கு வரும்" என்று கேட்டேன்.
7 அப்போது மெல்லிய பட்டாடை உடுத்தி, ஆற்றின் தண்ணீர் மேல் நின்ற அந்த மனிதர் தம் வலக்கையையும் இடக்கையையும் வானத்துக்கு நேராகத் தூக்கி, "ஒரு காலமும் இரு காலமும் அரைக் காலமும் செல்லும்; பரிசுத்த மக்களின் கூட்டம் சிதறடிக்கப்பட்டு முடிவுறும் போது இவை யாவும் நிறைவேறும்" என்று என்றென்றும் வாழ்கிறவர் பேரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன்.
8 நான் அதைக் கேட்டும் அதன் பொருளை அறியவில்லை; அப்பொழுது அவரைப் பார்த்து, "ஐயா, இவற்றுக்குப் பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டேன்.
9 அதற்கு அவர், "தானியேலே, நீ போகலாம்; குறிக்கப்பட்ட நாள்வரையில் இந்த வார்த்தைகள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும்.
10 பலர் தேர்ந்து கொள்ளப்பட்டு வெண்மையாக்கப்படுவர்; நெருப்பிலிட்டாற் போல்ப் புடம்போடப்படுவர்; தீயவர்கள் தீய நெறியில் நடப்பார்கள்; அவர்கள் அதை உணரவு மாட்டார்கள்; ஆனால் ஞானிகள் உணர்வார்கள்
11 அன்றாடப்பலி நிறுத்தப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நாட்டி வைக்கப்படும் காலமுதல், ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணுறு நாள் செல்லும்;
12 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் வரை காத்திருப்பவனே பேறு பெற்றவன்.
13 ஆனால் முடிவு வரும் வரை நீ போய் இரு; ஒருநாள் இளைப்பாற்றி அடைவாய். காலம் முடியும் போது, உனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள எழுவாய்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×