Bible Versions
Bible Books

Ezekiel 38 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, மொசோக், தூபால் இனத்தவர்களின் தலைவனும், மாகோகு நாட்டின் அரசனுமாகிய கோகுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி இறைவாக்குரை:
3 அவனுக்கு நீ சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மொசோக், தூபால் இனத்தவர்களின் தலைவனும் முதல்வனுமாகிய கோகு அரசனே, இதோ நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்:
4 நாம் உன்னைப் பிடித்து, நம் பக்கம் திருப்பி, உன் வாயில் கடிவாளங்களைப் பூட்டி, உன்னையும் உன் சேனைகளையும் குதிரைகளையும், மார்க்கவசமணிந்த உன் குதிரை வீரர்கள் அனைவரையும், பரிசை, கேடயம், வாள் தாங்கிய திரளான பட்டாளங்களையும் வெளியில் இழுத்துவருவோம்.
5 அவர்களோடு கேடயம் ஏந்தித் தலைச்சீரா அணிந்த பேர்சியர், எத்தியோப்பியர்,
6 லீபியர் ஆகியோரையும், கோமேரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், வடநாட்டரசனாகிய தொகொர்மாவையும், அவன் படைகளையும், அவன் நாட்டு மக்கள் எல்லாரையும் உன்னோடு கூட வெளியேறச் செய்வோம்.
7 நீயும் தயாராயிரு; உன்னுடன் கூடியிருக்கும் உன் கூட்டத்தார் எல்லாரும் தயாராய் இருக்கச் சொல்.
8 பல நாட்களுக்குப் பின் நீ விசாரிக்க அழைக்கப்படுவாய்; பல இனத்தவர்களிடமிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு, பல்வேறு நாடுகளிலிருந்து திரும்பக் கூட்டிவரப்பட்டு, நெடுநாளாய்ப் பாழாய்க் கிடந்த இஸ்ராயேல் மலைகளில் கூடி, போரின் கொடுமையிலிருந்து விடுபட்டு, இப்பொழுது அச்சமின்றி அமைதியாய் வாழும் இஸ்ராயேல் மக்களுக்கு எதிராகக் கடைசி ஆண்டுகளில் நீ வருவாய்;
9 பெருங்காற்றுப் போலக் கிளம்பி வருவாய்; நீயும், உன் படைகள் யாவும், உன்னுடன் இருக்கும் கணக்கிலடங்கா மக்களும் மேகம் போல வந்து அந்நாட்டை மூடிக்கொள்ளுவீர்கள்.
10 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்நாளிலே பலவகையான திட்டங்கள் உன் புத்தியில் உருவாகும்; மிகப் பொல்லாத திட்டமொன்றையும் நீ தீட்டுவாய்:
11 (அதாவது) நீ உன் உள்ளத்தில், 'நான் அரண்களில்லா நாட்டுக்கு எதிராகப் போவேன்; அச்சமின்றி அமைதியாய் வாழும் மக்களுக்கு எதிராய்ச் செல்கிறேன்; அவர்கள் மதில்கள் இல்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்கள் வீடுகளுக்குக் கதவுகளுமில்லை; கதவுகளுக்குத் தாழ்ப்பாளுமில்லை' என்று சிந்திப்பாய்.
12 அவர்களைக் கொள்ளையிடவும் சூறையாடவும் போவாய்; முன்னாளில் எல்லாராலும் கைவிடப்பட்டு, பின்னர் பல்வகை மக்கள் நடுவிலிருந்து சேர்த்துக் கொண்டு வரப்பட்டு, உலகத்தின் மையத்திலே இருக்கிற இந்த நாட்டில் குடியேறவும், செல்வம் சேர்க்கவும் தொடங்கின இஸ்ராயேல் மக்களைத் தாக்கக் கிளம்புவாய்.
13 சேபா நாட்டாரும், தேதான் மக்களும், தார்சீஸ் பட்டணத்து வணிகர்களும், அந்நாட்டின் மக்கள் அனைவரும் உன்னை நோக்கி, 'கொள்ளையிடுவதற்குத் தான் நீ இத்துணைப் பெரிய படையைச் சேர்த்தாயா? வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக் கொண்டு ஆடு மாடுகளையும் செல்வங்களையும் மிகுதியான உடைமைகளையும் திருடிக் கொள்வதற்குத் தான் இப்படிப்பட்ட திரளான வீரர்களைக் கொணர்ந்தாயா?' என்று சொல்வார்கள்.
14 ஆகையால், மனிதா, நீ இறைவாக்குரைத்து, கோகு என்பவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் மக்களாகிய இஸ்ராயேல் அமைதியாக வாழ்கின்ற நாளில்,
15 நீ கிளர்ந்தெழுந்து, நீயும், உன்னுடன் மிகுதியான மக்களும் மாபெரும் கூட்டமாய்த் திரண்டு குதிரை மேலேறிப் பலமுள்ள சேனையாய் வடநாட்டிலிருந்து வருவீர்கள்.
16 இஸ்ராயேல் என்னும் நம் மக்கள் மேல் வந்து, அவர்கள் நாட்டை மேகம் போலப் பரவி மூடுவாய்; கடைசி நாட்களில் உன்னை நமது நாட்டுக்கு எதிராகக் கொண்டு வருவோம்; கோகு மன்னனே, உன் வழியாக அவர்கள் கண் முன் நமது பரிசுத்தத்தை நிலைநாட்டும் போது, புறவினத்தார் நம்மை அறிந்து கொள்வார்கள்.
17 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உன்னைக் குறித்துத் தான் நாம் பண்டைக்காலத்தில் நம் ஊழியர்களான, இஸ்ராயேலின் இறைவாக்கினர்கள் வாயிலாய்ப் பேசினோம்; அவர்கள் அந்நாட்களில் பல்லாண்டுகள் இறைவாக்குரைத்து, நாம் உன்னை அவர்களுக்கு எதிராகக் கொண்டு வருவோம் என்று முன்னுரைத்தார்கள்.
18 ஆனால் கோகு என்பவன் இஸ்ராயேல் நாட்டுக்கு எதிராக எழுந்து வரும் அந்நாளில், நமது கோபம் தூண்டப்படும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
19 ஏனெனில் நமது ஆத்திரத்திலும் பொறி பறக்கும் கோபத்திலும் நாம் உறுதியாய்க் கூறுகிறோம்: அந்நாளில் இஸ்ராயேல் நாட்டில் ஒரு பேரதிர்ச்சி உண்டாகும்.
20 கடல் மீன்களும், வானத்துப் பறவைகளும், காட்டு மிருகங்களும், பூமியில் ஊர்ந்து செல்லும் ஊர்வன யாவும், பூமியில் நடமாடும் மனிதர்கள் அனைவரும் நமது திருமுன் நடுங்குவார்கள்; மலைகள் தரைமட்டமாகும், சிகரங்கள் வீழும், மதில்கள் எல்லாம் இடிந்து தரையில் விழும்.
21 நமது எல்லா மலைகளிலும் அவனுக்கு எதிராக வாளை வரவழைப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்; ஒவ்வொருவன் வாளும் அவனவன் சகோதரனுக்கு எதிராய் இருக்கும்;
22 கொள்ளை நோயாலும், இரத்தப் பெருக்கினாலும் அவனை நாம் தீர்ப்பிடுவோம்; அவன் மேலும், அவன் சேனைகளின் மேலும், அவனைச் சார்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் மேலும், பெருமழையும் கல்மழையும் நெருப்பும் கந்தகமும் பெய்யச் செய்வோம்.
23 இவ்வாறு புறவினத்தார் அனைவர் முன்னிலையிலும் நமது மகிமையையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்தி நம்மைக் காண்பிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×