Bible Versions
Bible Books

2 Kings 5 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 சீரியா அரசனின் படைத்தலைவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நாமான் என்று பெயர். அரசன் அவனைப் பெரிய மனிதனாக மதித்துப் போற்றி வந்தான். ஏனெனில் அவனைக் கொண்டு ஆண்டவர் சீரியாவைக் காப்பாற்றியிருந்தார். அவன் ஆற்றல் படைத்தவனும் செல்வனுமாய் இருந்தும், அவனுக்குத் தொழுநோய் கண்டிருந்தது.
2 அப்படியிருக்க, சில கள்ளர்கள் சீரியாவிலிருந்து இஸ்ராயேல் நாட்டில் நுழைந்து அங்கிருந்து ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். இவளோ நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
3 அச்சிறுமி தன் தலைவியை நோக்கி, "என் தலைவர் சமாரியாவில் இருக்கிற இறைவாக்கினரைப் பார்க்கச் சென்றிருந்தால் அவர் இவரது தொழுநோயை நிச்சயமாய்க் குணமாக்கியிருப்பார்" என்றாள்.
4 அதைக் கேட்ட நாமான் அரசனிடம் சென்று, இஸ்ராயேல் நாட்டிலிருந்து வந்திருந்த அச்சிறுமி கூறின அனைத்தையும் அவனுக்குத் தெரிவித்தான்.
5 சீரியாவின் அரசன் அதற்கு மறுமொழியாக, "நீர் அவ்விடம் போகலாம். நான் இஸ்ராயேல் அரசனுக்குக் கடிதம் அனுப்புவேன்" என்றான். நாமான் தன்னோடு பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்து ஆடையணிகளையும் எடுத்துக் கொண்டு பயணமானான்.
6 கடிதத்தை இஸ்ராயேல் அரசனிடம் கொடுத்தான். அதில், "நீர் இக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட உடன் என் ஊழியன் நாமானுக்குக் கண்டுள்ள தொழுநோயினின்று நீர் அவனைக் குணமாக்கும் பொருட்டு அவனை உம்மிடம் அனுப்பியுள்ளேன் என்று அறிந்துகொள்ளும்" என எழுதப்பட்டிருந்தது.
7 இஸ்ராயேல் அரசன் கடிதத்தைப் படித்த உடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "ஒரு மனிதனைச் சீரியா அரசர் என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்லுகிறாரே; நானென்ன உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் கடவுளா? என்னோடு போரிட அவர் எவ்வாறு வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று பாருங்கள்" என்று கூறினான்.
8 கடவுளின் மனிதர் எலிசேயு இஸ்ராயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியை அறிந்து, அவனிடம் ஆள் அனுப்பி, "நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அம்மனிதன் என்னிடம் வரட்டும். இஸ்ராயேலில் இறைவாக்கினர் உண்டு என அவன் அறியட்டும்" என்று சொல்லச் சொன்னார்.
9 ஆகையால் நாமான் தன் குதிரைகளோடும் தேர்களோடும் எலிசேயுவுடைய வீட்டு வாயிலின் முன் வந்து நின்றான்.
10 எலிசேயு அவனுக்கு ஆள் அனுப்பி, "நீ போய் யோர்தான் நதியில் ஏழு முறை குளித்தால் உன் உடல் நலம் பெறும்; நீயும் தூய்மையாவாய்" என்று சொல்லச் சொன்னார்.
11 அதற்கு நாமான் கோபமுற்று, "இறைவாக்கினர் என் அருகில் வந்து தம் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டி, தொழுநோய் கண்ட இடங்களைக் கையால் தொட்டு எனக்குக் குணம் அளிப்பார் என்று நான் எண்ணியிருந்தேன்.
12 நான் குளித்து உடலைத் தூய்மைப்படுத்தும் பொருட்டு, இஸ்ராயேலில் உள்ள ஆறுகள் எல்லாவற்றையும் விட நல்ல தண்ணீரை உடைய தமாஸ்கு நகர நதிகளான ஆபானா, பார்பார் என்ற நதிகள் எங்களுக்கு இல்லையா?" என்று சொல்லிச் சினத்தோடு தான் வந்த வழியே திரும்பிச் சென்றான்.
13 அந்நேரத்தில் அவனுடைய ஊழியர்கள் அவனை அணுகி, "தலைவ, இறைவாக்கினர் இதைவிடப் பெரிய காரியத்தைச் செய்யக் கட்டளையிட்டிருந்தாலும் நீர் அதைக் கட்டாயம் செய்திருப்பீர். அவர், 'குளிக்கப் போம், சுத்தமாவீர்' என்ற போது தாங்கள் எவ்வளவு மரியாதையாய்க் கேட்டுக்கொள்ள வேண்டியவராய் இருக்கிறீர்?" என்றனர்.
14 எனவே, நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் மனிதர் தனக்குக் கட்டளையிட்டிருந்த படி யோர்தான் நதியில் ஏழு முறை குளித்தான். இப்படிச் செய்ததால் அவனது உடல் நலம் பெற்று ஒரு சிறு குழந்தையின் உடலைப்போல் மாறினது; அவனும் முழுதும் தூய்மையானான்.
15 பின்பு அவன் தன் பரிவாரங்களோடு கடவுளின் மனிதரிடம் திரும்பி வந்தான். அவர் முன் நின்று, "இஸ்ராயேலில் கடவுளைத் தவிர வேறு கடவுள் அனைத்துலகிலும் இல்லை என இப்போது நிச்சயமாக அறிந்து கொண்டேன். ஆகையால், அடியேனுடைய காணிக்கைகளைத் தாங்கள் ஏற்க வேண்டும் என்று வேண்டுகிறேன்" என்றான்.
16 அதற்கு அவர், "நான் வழிபட்டு வரும் ஆண்டவர் மேல் ஆணை! நான் உன்னுடைய காணிக்கைகளில் எதையும் பெற்றுக்கொள்ளேன்" என மறுமொழி கூறினார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் எலிசேயு அதற்கு உடன்படவில்லை.
17 அப்போது நாமான் அவரைப் பார்த்து, "உமது விருப்பப்படியே ஆகட்டும். ஆனால் இரு கோவேறு கழுதைகள் சுமக்கக் கூடிய அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தரவேண்டும் என்று உம்மை வேண்டுகிறேன். இனிமேல் உம் அடியான் அன்னிய தேவர்களுக்குத் தகனப்பலிகளையோ வேறு பலிகளையோ ஒருபோதும் செலுத்தப் போவதில்லை. நான் ஆண்டவருக்கு மட்டுமே பலியிடுவேன்.
18 தாங்கள் உம் அடியானுக்காக ஆண்டவரை மன்றாடிக் கேட்க வேண்டிய ஒரு காரியம் மட்டும் உண்டு. அதாவது, என் தலைவன் வழிபடுவதற்காக ரெம்மோன் கோயிலுக்குச் சென்று, என் கையின் மேல் சாய்ந்து கொண்டு அதனைக் கும்பிடுகையில் நானும் அதே இடத்தில் தலை குனிந்தால், ஆண்டவர் என்னை மன்னிக்குமாறு வேண்டுவீர்" என்றான்.
19 அதற்கு எலிசேயு, "நீ அமைதியுடன் சென்று வா" என்று கூற, நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, குறித்த நல்ல காலத்தில் போய்விட்டான்.
20 கடவுளின் மனிதருடைய ஊழியன் ஜியேசி, "என் தலைவர் சீரியனான நாமானை இலவசமாய்க் குணமாக்கி, அவன் கொண்டு வந்த பரிசுகளில் ஒன்றையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆண்டவர் மேல் ஆணை! நான் ஓடிப்போய் அவனிடம் ஏதாகிலும் பெற்றுக் கொள்வேன்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
21 இப்படி ஜியேசி நாமான் பின்னே ஓட, நாமான் அவன் ஓடி வருவதைக் கண்டு தன் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், "என்ன, எல்லாம் சரிதானா?" என்று வினவினான்.
22 ஜியேசி, "ஆம். என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, 'இறைவாக்கினரின் மக்களில் இருவர் இப்போதுதான் எபிராயிம் மலையிலிருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியும், இரண்டு உடைகளும் கொடுத்து அனுப்பும்' என்று சொல்லச் சொன்னார்" என்றான்.
23 அதற்கு நாமான், "நீ இரண்டு தாலந்து கொண்டு போவது நலம்" என்று கூறி, அவற்றை ஜியேசி பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினான். பிறகு அவற்றையும் இரண்டு உடைகளையும் இரண்டு சாக்குகளில் போட்டுக் கட்டி, அவற்றைத் தன் ஊழியர்களில் இருவர் மேல் சுமத்தினான். அவர்களும் அவற்றைச் சுமந்து கொண்டு ஜியேசிக்கு முன் சென்றனர்.
24 மாலை வேளையில் வீடுவந்த போது ஜியேசி அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் பத்திரமாக வைத்தான். பின்னர் அம்மனிதர் திரும்பிப் போக விடை கொடுத்து அனுப்பினான். அவர்களும் பிரிந்து சென்றனர்.
25 ஜியேசி தன் தலைவரிடம் வந்து அவர் முன் நின்றான். எலிசேயு அவனைப் பார்த்து, "ஜியேசி, எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். அவன், "உம்முடைய அடியான் ஓரிடத்திற்கும் செல்லவில்லை" என மறுமொழி சொன்னான்.
26 அதற்கு எலிசேயு, "அந்த மனிதன் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்தது எனக்குத் தெரியாதா? ஒலிவத் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும், ஆடு மாடுகளையும், பணிவிடைக்காரர் பணிவிடைக்காரிகளையும் வாங்கிக் கொள்ளும்படி பணத்தைப் பெற்றுக் கொண்டதோடு உடைகளையும் நீ பெற்றுக் கொண்டாய், இல்லையா?
27 அதனால், நாமானுடைய தொழுநோய் உன்னையும் உன் சந்ததியையும் பீடிக்கும்" என்றார். ஜியேசியோ தன் தலைவரை விட்டுப் பிரியு முன்னே வெண்பனி போன்று தொழுநோய் அவன் உடல் எங்கும் கண்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×