Bible Versions
Bible Books

2 Chronicles 23 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அவளது ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயியாதா திடங்கொண்டு நூற்றுவர் தலைவரான எரோகாமின் மகன் அசாரியாசையும், யோகனானின் மகன் இஸ்மாயேலையும், ஒபேதின் மகன் அசாரியாசையும், அதயாசின் மகன் மகவாசியாசையும், ஜெக்ரியின் மகன் எலிசபாத்தையும் வரச்சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார்.
2 இவர்கள் யூதா நாடெங்கும் போய் யூதாவின் நகர்களிலெல்லாம் இருந்த லேவியர்களையும், இஸ்ராயேல் குலத் தலைவர்களையும் கூட்டிக் கொண்டு யெருசலேமுக்கு வந்தனர்.
3 இவர்கள் எல்லாரும் கடவுளின் ஆலயத்தில் அரசனோடு உடன்படிக்கை செய்து கொண்டனர். யோயியாதா அவர்களை நோக்கி, "இதோ அரசனின் மகனைப் பாருங்கள், தாவீதின் புதல்வரைக் குறித்து ஆண்டவர் சொன்னபடியே அவன் அரசாளப் போகிறான்.
4 நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில்:
5 ஓய்வு நாளில் வழக்கப்படி வரவேண்டிய உங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நகர வாயிலிலும், இரண்டாம் பகுதியினர் அரண்மனையிலும், மூன்றாவது பகுதியினர் அடிப்படை வாயிலிலும் இருக்க வேண்டும். எஞ்சிய மக்களெல்லாரும் ஆண்டவரின் ஆலய வளாகங்களில் இருக்க வேண்டும்.
6 குருக்களையும் திருப்பணி புரியும் லேவியர்களையும் தவிர ஒருவரும் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது. தூய்மையாக்கப்பட்ட இவர்கள் மட்டுமே நுழைய வேண்டும். ஏனைய மக்கள் அனைவரும் ஆண்டவரின் கட்டளைகளை அனுசரிக்கக்கடவார்கள்.
7 லேவியர்களோ ஆயுதம் தாங்கியோராய் அரசரைச் சுற்றிலும் நிற்கவேண்டும். ஆலயத்தில் நுழையும் மற்ற எவனும் கொல்லப் படுவான். அரசர் செல்லுமிடமெல்லாம் லேவியர் அவரைப் பின்செல்ல வேண்டும்" என்றார்.
8 குரு யோயியாதா கட்டளையிட்டவாறே லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமான தத்தம் ஆட்களைக் கூட்டிவந்திருந்தனர். ஏனெனில் வாரந்தோறும் முறைப்படி வேலை செய்து முடித்த குழுக்கள் வீட்டுக்குப் போகுமாறு யோயியாதா அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
9 தாவீது அரசர் ஆண்டவரின் ஆலயத்திற்குக் காணிக்கையாகக் கொடுத்திருந்த ஈட்டிகளையும் கேடயங்களையும் பரிசைகளையும் குரு யோயியாதா நூற்றுவர் தலைவர்களிடம் கொடுத்தார்.
10 ஏனையோர் வாள் ஏந்தியவராய் யோயியாதாவின் கட்டளைப்படி ஆலயத்தின் வலப்பக்கமும் இடப்பக்கமும் பலிபீடத்திற்கு முன்னும் ஆலயத்திற்கு முன்னும் அரசனைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டனர்.
11 பின்பு அரச மகனை வெளியே கொண்டு வந்து அவனது தலை மேல் மகுடத்தை வைத்து, திருச்சட்ட நூலை அவனது கையில் கொடுத்து அவனை அரசனாக்கினார்கள். பின்பு பெரியகுரு யோயியாதாவும் அவர் புதல்வரும் அவனை அபிஷுகம் செய்து அவனுக்கு நல்லாசி கூறி, "அரசர் வாழ்க!" என்றனர்.
12 மக்கள் ஓடிவந்து அரசனைப் புகழும் பேரொலியைக் கேட்டவுடன், அத்தாலியா ஆண்டவரின் ஆலயத்தில் நுழைந்து மக்களிடம் பேச வந்தாள்.
13 ஆனால் வாயிற்படியின் மேல் அரசன் நிற்கிறதையும், தலைவர்கள் தங்கள் படைகளோடு அரசனைச் சூழ்ந்திருக்கிறதையும், நாட்டின் குடிகள் எல்லாரும் மன மகிழ்ந்து எக்காளம் ஊதிப் பற்பல இசைக் கருவிகளை வாசித்துப் பாட்டுப்பாடிப் புகழ்ந்து கொண்டாடுகிறதையும் கண்டவுடன் அத்தாலியா தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "சதி! சதி!" கத்தினாள்.
14 பெரிய குரு யோயியாதா படைத்தலைவர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் பார்க்க வெளியே போய், அவர்களை நோக்கி, "அவளைப் பிடித்துச் சுற்று மதிலுக்குப் புறம்பே கொண்டு போய் வாளால் வெட்டி வீழ்த்துங்கள். ஆண்டவரின் ஆலயத்தில் அவளைக் கொன்று போடக்கூடாது" என்று சொன்னார்.
15 அதன்படி அவர்கள் அவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி அரண்மனையின் குதிரை வாயிலுக்குக் கொண்டு வந்து அங்கே அவளைக் கொன்று போட்டனர்.
16 பின்னர், யோயியாதா, "நாங்கள் இனி ஆண்டவரின் மக்களாய் இருப்போம்" என்று மக்கள் அனைவரும் அரசனும் தங்களுக்குள் உடன்படிக்கை செய்துகொள்ளச் செய்தார்.
17 அப்பொழுது எல்லா மக்களும் கூடிப் பாவாலின் கோவிலிலே நுழைந்து அக்கோயிலை இடித்துப் போட்டனர்; பலிபீடத்தையும் சிலைகளையும் தகர்த்துப் பாவாலின் குருவாயிருந்த மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாக கொன்று போட்டனர்.
18 தாவீது வகுத்திருந்த பிரிவுகளின்படி யோயியாதா ஆண்டவரின் ஆலயத்தைக் கண்காணிக்கும் அலுவலர்களை ஏற்படுத்திக் குருக்களின் அதிகாரத்தின் கீழும் லேவியரின் அதிகாரத்தின் கீழும் அவர்களை வைத்தார். தாவீதின் கட்டளைப்படியே, அவர்கள் பாடி மகிழ்ந்து மோயீசன் திருச்சட்டத்தில் எழுதியிருந்தபடி தகனப்பலிகளை ஆண்டவருக்குச் செலுத்தக் கட்டளையிட்டார்.
19 மேலும் எவ்வகையிலேனும் தீட்டுப்பட்டவர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் நுழையாதபடி அதன் வாயில்களுக்குக் காவலரை ஏற்படுத்தினார்.
20 பின் நூற்றுவர் தலைவர்களும் ஆற்றல் வய்ந்த வீரர்களும் மக்கள் தலைவர்களும் நாட்டு மக்கள் அனைவரும் புடைசூழ ஆண்டவரின் ஆலயத்திலிருந்து அரசனை உயர்ந்த வாயில் வழியாக அரண்மனைக்குள் அழைத்துச் சென்று, அங்கே அரியணையில் அவனை அமர்த்தினார்.
21 அப்பொழுது மக்கள் எல்லாரும் மகிழ்ந்தனர். நகரில் அமைதி நிலவிற்று. அத்தாலியாளோ வாளுக்கு இரையாகி மாண்டாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×