Bible Versions
Bible Books

Revelation 1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு: விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் அடியார்களுக்கு வெளிப்படுத்துமாறு கடவுள் அதை அவருக்கு அருளினார்.
2 கிறிஸ்துவோ தம் தூதரை அனுப்பித் தம் அடியானாகிய அருளப்பனுக்கு அவற்றைத் தெரிவித்தார். அருளப்பன் தான் கண்டதனைத்தையும் அறிவித்து, கடவுளின் வார்த்தைக்கும், இயேசு கிறிஸ்து அளித்த சாட்சியத்துக்கும் சான்று கூறினான்.
3 இவ்விறைவாக்குகளை வாசிப்பவனும், அவற்றிற்குச் செவிசாய்த்து இந்நூலில் எழுதியுள்ளதின்படி நடப்பவர்களும் பேறுபெற்றவர்களே: இதோ! குறித்த காலம் அண்மையிலேயே உள்ளது.
4 ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் அருளப்பன் எழுதுவது: 'இருக்கிறவர், இருந்தவர், இனி வருபவர்' எனும் இறைவனிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும், உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக.
5 இவரே நம்பிக்கைக்குரிய சாட்சி, இறந்தோரிலிருந்து எழுந்தவருள் தலைப்பேறானவர், மண்ணுலக அரசர்களுக்குத் தலைமையானவர். இவர் நமக்கு அன்புசெய்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களினின்று நம்மை விடுவித்தார்.
6 மேலும் தம் தந்தையும் கடவுளுமானவருக்கு ஊழியம் செய்ய நம்மை அரசகுல குருக்களாக்கினார். இவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரியனவாகுக. ஆமென்.
7 இதோ அவர் மேகங்கள் சூழ வருகிறார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தினவர்களும் காண்பார்கள். அவருக்குச் செய்ததை நினைத்து மண்ணுலகின் குலத்தார் அனைவரும் புலம்பி அழுவர். ஆம், இது உண்மை. ஆமென்.
8 "அரகமும் னகமும் நானே" என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள். இருக்கிறவர், இருந்தவர், இனி வருபவர் அவரே.
9 இயேசுவுக்குள் உங்களோடு வேதனையிலும் அரசுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்ளும் உங்கள் சகோதரனாகிய அருளப்பன் யான், கடவுளின் வார்த்தையை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகப் பத்மு என்ற தீவுக்கு அனுப்பப்பட்டேன்.
10 அன்று ஞாயிற்றுக்கிழமை; தேவ ஆவி என்னை ஆட்கொண்டது. எனக்குப் பின்னால் பெருங் குரல் ஒன்று கேட்டது. அது எக்காளம்போல் ஒலித்தது.
11 'காட்சியில் காண்பவற்றை ஏட்டில் எழுதி எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தைரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய ஏழு சபைகளுக்கு அனுப்பு' என்று அக்குரல் சொன்னது.
12 என்னோடு பேசியவர் யார் என்று அறியத் திரும்பிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளைக் கண்டேன்.
13 அவற்றின் நடுவில் மனுமகனைப்போன்ற ஒருவரைப் பார்த்தேன்; அவர் நீண்ட அங்கி அணிந்திருந்தார். மார்பில் பொற்கச்சை கட்டியிருந்தார்.
14 அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும், உறைபனிபோலும் இருந்தது. அவருடைய கண்கள் எரிதழல்போல் சுடர்விட்டன.
15 அவருடைய பாதங்கள் உலையிலிட்ட வெண்கலம்போல் இருந்தன. அவரது குரல் கடல் அலைகளின் இரைச்சலை ஒத்திருந்தது.
16 தம் வலக்கையில் ஏழு விண்மீன்களை ஏந்திக்கொண்டிருந்தார். இரு புறமும் கூர்மையான வாள் அவரது வாயினின்று வெளிப்பட்டது. அவரது முகம் நண்பகல் கதிரவன் ஒளி என ஒளிர்ந்தது.
17 நான் அவரைக் கண்டதும் செத்தவனைப் போல் அவருடைய அடிகளில் விழுந்தேன். அவர் என்னை வலக் கையால் தொட்டு, சொன்னதாவது: "அஞ்சாதே, முதலும் இறுதியும் நானே. வாழ்பவரும் நானே.
18 சாவுக்குட்பட்டேனாயினும் இதோ, நான் என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் எனக்கு உண்டு.
19 ஆகையால் நீ கண்டதையும் இப்போது நிகழ்கின்றதையும் இனி நிகழப்போவதையும் எழுது.
20 எனது வலக் கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள், ஏழு பொன் குத்துவிளக்குகள் இவற்றின் உட்பொருள் இதுவே; ஏழு விண்மீன்கள் ஏழு சபைகளின் தூதர்களையும், ஏழு குத்து விளக்குகள் ஏழு சபைகளையும் குறிக்கின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×