Bible Books

1
:

1. அப்தியாஸ் கண்ட காட்சியாவது: இறைவனாகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறார்: ஏற்கனவே தூதன் ஒருவன் மக்களினங்களிடம் சென்று, "எழுந்து கிளம்புங்கள்! அதற்கு எதிராகப் போருக்குப் புறப்படுவோம்!" என்றதை நாம் கேட்டிருக்கிறோம்.
2. இதோ, மக்களினங்கள் நடுவில் உன்னைச் சிறியதாக்குகிறோம், பெரும் நிந்தைக்கு ஆளாக்குவோம்.
3. கற்பாறைகளின் பிளவுகளில் வாழ்ந்து கொண்டு, உன் அரியணையை உயரத்தில் ஏற்படுத்தி, "என்னைத் தரை மட்டும் தாழ்த்தக்கூடியவன் யார்?" என உன் உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே, உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றி விட்டது.
4. கழுகு போல நீ உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்து உன்னைக் கீழே வீழ்த்துவோம், என்கிறார் ஆண்டவர்.
5. உன்னிடம் திருடர்கள் வருவார்களாயின்- கொள்ளைக்காரர்கள் இரவில் வந்தார்களானால்- தங்களுக்குப் போதிய அளவுமட்டும் திருடமாட்டார்களா? திராட்சைப்பழம் பறிப்பவர்கள் உன்னிடம் வந்தால், திராட்சைப் பழங்களில் கொஞ்சமாவது விடமாட்டார்களா? நீ எவ்வளவோ அழிவைக் கண்டு விட்டாய்!
6. ஏசாவு எவ்வளவோ கொள்ளையடிக்கப்பட்டான்! அவனுடைய மறைந்திருந்த கருவூலங்கள் சூறையாடப்பட்டன.
7. நாட்டின் எல்லை வரை உன்னைப் பகைவர்கள் விரட்டினார்கள், உன்னுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் யாவரும் உன்னை ஏய்த்தனர்; உன்னோடு நட்புறவாடியவர்கள் உனக்குக் கண்ணி வைத்தனர்," அவனுக்கு மூளையில்லை" என்று சொன்னார்கள்.
8. அந்நாளில் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலை மேலுள்ள அறிவையும் அழிக்காமல் விடுவோமா, என்கிறார் ஆண்டவர்.
9. தேமானே, உன் வீரர்கள் திகிலடைவர், ஏசாவின் மலையில் உள்ள ஒவ்வொருவனும் மாண்டுபோவான்.
10. உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக நீ செய்த கொலைப்பழி, அக்கிரமம் இவற்றுக்காக வெட்கம் உன்னைப் பிடுங்கித் தின்னும்; நீ என்றென்றைக்கும் அழிந்துபோவாய்.
11. நீ உதவிசெய்ய முன்வராமல் விலகி நின்ற அந்நாளில்- அந்நியர்கள் அவன் செல்வத்தை வாரிச் சென்ற அந்நாளில்- வெளி நாட்டார் அவன் வாயில்கள் வழியாய் நுழைந்து யெருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப் போட்ட போது, நீயும் அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!
12. உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவன் துன்ப நாளைக் கண்டு நீ மகிழ்ச்சியடையாதே; யூதாவின் மக்களைப் பார்த்து, அவர்களின் அழிவுநாளில் அக்களியாதே. அவர்களின் வேதனை நாளில் அவர்களைப் பழித்துக் காட்டாதே.
13. நம் மக்கள் கேடுற்ற நாளில் அவர்களுடைய வாயிலுக்குள் நுழையாதே; அவர்கள் அழிவுற்ற நாளில் அவர்களுடைய பொருட்களைக் கொள்ளையடிக்காதே.
14. அவர்களுள் தப்பியோடுகிறவர்களை வெட்டி வீழ்த்தும்படி நாற்சந்திகளில் காத்து நிற்காதே; அவர்களின் வேதனை நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக் கொடுக்காதே.
15. ஏனெனில் ஆண்டவரின் நாள் எல்லா மக்களினங்கள் மேலும் வரப் போகிறது. பிறருக்கு நீ செய்தது போலவே உனக்கும் செய்யப்படும், உன் செயல்கள் உன் தலை மேலேயே சுமத்தப்படும்.
16. நமது பரிசுத்த மலை மேல் நம் கோபத்தின் பாத்திரத்தை நீங்கள் குடித்தது போலவே, புறவினத்தார் அனைவரும் தாராளமாய் அதைக் குடிப்பார்கள்; ஆம், மேலும் மேலும் குடிப்பார்கள், கடைசித் துளிவரையில் குடிப்பார்கள், இருந்தும் இல்லாதவர்களைப் போல் ஆவார்கள்.
17. ஆனால் சீயோன் மலையில் தப்பிப் பிழைத்தவர்கள் இருப்பார்கள், அதுவும் பரிசுத்த இடமாய் இருக்கும்; தங்களை ஆட்கொண்டவர்களை இப்பொழுது யாக்கோபு வீட்டார் ஆட்கொள்வர்.
18. யாக்கோபின் வீட்டார் நெருப்பாய் இருப்பர், யோசேப்பின் வீட்டார் தீக்கொழுந்தாய் இருப்பர், ஏசாவின் வீட்டார் வைக்கோலாய் இருப்பர்; அவர்கள் இவர்களை முற்றிலும் சுட்டுப் பொசுக்கி விடுவர், ஏசாவின் வீட்டாருள் தப்பிப் பிழைத்தவர் யாருமிரார்; ஏனெனில் இதை ஆண்டவரே சொல்லிவிட்டார்.
19. தென்னாட்டில் வாழ்பவர்கள் ஏசாவின் மலையையும், சமவெளியில் இருப்பவர்கள் பிலிஸ்தியர் நாட்டையும் உரிமையாக்கிக் கொள்வார்கள். எப்பீராயிம் நாட்டையும், சமாரியா நாட்டையும் அவர்கள் உரிமையாக்கிக் கொள்வார்கள்; பென்யமீனோ கலகாத்தைச் சொந்தமாக்கிக் கொள்வான்.
20. இஸ்ராயேல் மக்களுள் இந்தப் படையிலிருந்து நாடு கடத்தப்பட்டோர் பெனீசியாவிலிருந்து சரெப்தா வரையில் உரிமையாக்கிக் கொள்வர்; யெருசலேமிலிருந்து செப்பாராதுக்கு நாடு கடத்தப்பட்டோர் தென்னாட்டு நகரங்களை உரிமையாக்கிக் கொள்வர்.
21. ஏசாவின் மலையை ஆளும்படி வெற்றி வீரராக சீயோன் மலைமீது ஏறுவார்கள்; அரசு ஆண்டவருக்கே உரியதாய் இருக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×