Bible Books

8
:

1. சகோதரர்களே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குக் கடவுள் தந்த அருளைப்பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
2. அவர்கள் வேதனையால் மிகவும் சோதிக்கப்பட்டபோது, கொடிய வறுமையில் ஆழ்ந்திருந்தும், அவர்களுற்ற பெருமகிழ்ச்சி வள்ளன்மையாய்ப் பொங்கி வழிந்தது.
3. தங்களால் இயன்ற அளவுக்குக் கொடுத்தார்கள்; இயன்ற அளவுக்குமேலும் கொடுத்தார்கள்; அதற்கு நானே சாட்சி.
4. இறைமக்களுக்குச் செய்யப்படும் அறப்பணியில் பங்கு கொள்ளும் பேறு தங்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாங்களே முன்வந்து எங்களை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டனர்.
5. நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக, அவர்கள் கடவுளின் திருவுளத்தால் தங்களையே ஒப்புக்கொடுத்தார்கள். இப்படி அவர்கள் எங்கள் பணிக்குத் தங்களைக் கையளித்தது, முதன்மையாக ஆண்டவருக்கே கையளித்ததாயிற்று.
6. ஆகையால் தீத்து தொடங்கிய அத்தகைய அன்புத் தொண்டினை உங்களிடையே செய்து முடிக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டோம்.
7. மேலும், விசுவாசம், சொல்வன்மை, அறிவு, தளாராத ஊக்கம், எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட அன்பு, இவற்றிலெல்லாம் நிறைவளம் உங்களுக்கு வாய்த்துள்ளது. அதே வளம் இந்த அன்புத் தொண்டிலும் உங்களிடம் விளங்கட்டும்.
8. இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை; பிறருடைய ஊக்கத்தை எடுத்துக்காட்டி, உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே விரும்புகிறேன்.
9. ஏனெனில், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் வன்மையை நீங்கள் அறிந்தேயிருக்கிறீர்கள். அவர் செல்வ மிக்கவராய் இருந்தும், அவருடைய ஏழ்மையால், நீங்கள் செல்வராகும்படி, உங்களுக்காக ஏழையானார்.
10. அத்திட்டத்தைப்பற்றிய என் கருத்து இதுவே: இதனால் உங்களுக்கே நம்மை உண்டாகும். கடந்த ஆண்டிலிருந்து நன்கொடை திரட்டத் தொடங்கியவர்கள் நீங்களே; அதுமட்டுமன்று, அப்படிச் செய்ய முதலில் திட்டமிட்டவர்களும் நீங்களே.
11. அப்படியானால் தொடங்கியதை இப்பொழுது செய்து முடியுங்கள்; திட்டமிடுவதற்கு இருந்த ஆர்வத்தோடேயே, உங்களுடைய நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, அத்திட்டத்தை நிறைவேற்றுங்கள்.
12. கொடுப்பதற்கு உள்ளத்தில் ஆர்வம் இருந்தால், தன்னிடம் உள்ளதற்கு ஏற்றபடி எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தன்னிடம் இருப்பதற்கு மேலாக யாரும் கொடுக்கவேண்டியதில்லை .
13. மற்றவர்களின் வேதனையைத் தணிக்க, நீங்கள் வேதனைக்குள்ளாக வேண்டியதில்லை; சமநிலைப்படுத்துவது பற்றியே இங்கே பேச்சு.
14. அதாவது இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது; அவர்களுடைய குறைவை நீக்குங்கள்; அவர்களிடம் மிகுதியாயிருக்கும்போது, அவர்கள் உங்கள் குறைவை நீக்கக்கூடும். இவ்வாறு சமநிலை எற்படும்.
15. ' மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மிச்சமுமில்லை, குறைவாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவுமில்லை, என எழுதியுள்ளதன்றோ?
16. உங்கள்மேல் எனக்குள்ள அதே அக்கறையைத் தீத்துவின் உள்ளத்திலும் உண்டாக்கிய கடவுளுக்கு நன்றி.
17. எங்கள் வேண்டுகோளுக்குத் தீத்து இணங்கியதோடு, தாமும் மிகுந்த அக்கறைகாட்டி, உங்க?ருக்குப் புறப்படத் தாமே முன்வந்தார்.
18. அவரோடு கூட நாங்கள் அனுப்பியுள்ள சகோதரர் நற்செய்தித் தொண்டினால் எல்லாச் சபைகளிலும் பேர் பெற்றிருப்பவர்.
19. அதுமட்டுமன்று, ஆண்டவருக்கு மகிமையுண்டாகவும், எங்கள் ஆர்வம் விளங்கவும், நாங்கள் பணியாற்றும் இந்த அன்புத் தொண்டில் எங்களுக்கு வழித் துணையாகச் சபைகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்.
20. எங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ்வளவு தாராள நன்கொடையை நாங்கள் கையாளும் முறைபற்றி யாரும் எங்களைக் குறைகூறாதபடி பார்த்துக் கொள்ளுகிறோம்.
21. ஆண்டவர் முன்னிலையில் மட்டுமன்று, மக்கள் முன்னிலையிலும் கூட நன்மதிப்பை இழக்காதபடி பார்த்துக்கொள்கிறோம்.
22. அவர்களோடுகூட, எங்களைச் சேர்ந்த வேறொரு சகோதரரையும் அனுப்பியுள்ளோம். இவர் ஊக்கமுள்ளவர் எனப்பல சூழ்நிலைகளில் பலமுறை கண்டறிந்தோம்; அவர் உங்கள்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் இப்பொழுது இன்னும் மிகுதியான ஊக்கம் காட்டுகிறார்.
23. தீத்துவைப் பற்றிக் கேள்வி எழுந்தால், அவர் என் தோழர், நான் உங்களுக்காகச் செய்யும் தொண்டில் என் உடனுழைப்பாளி என்று அறிந்துகொள்ளுங்கள். நாங்கள் அனுப்பிய சகோதரர்களோ, சபைகளின் அப்போஸ்தலர்கள்; அவர்கள் கிறிஸ்துவுக்கு மகிமையாய் இருக்கிறார்கள்.
24. ஆகையால், உங்களுடைய அன்பை எடுத்துக்காட்டி, நாங்கள் அவர்களிடத்தில் உங்களைக் குறித்துப் பெருமைப்படுவது முறையே எனச் சபைகளின் முன்னிலையில் எண்பியுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×