Bible Books

3
:

1. அன்புக்குரியவர்களே, நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது இது இரண்டாம் முறை. உங்கள் உள்ளத்தில் புனித கருத்துகள் எழச்செய்யும்படி, இவ்விரு கடிதங்ளிலும் இவையெல்லாம் நினைவுறுத்துகிறேன்.
2. பரிசுத்த இறைவாக்கினர் முன்னறிவித்த சொற்களையும், ஆண்டவரும் மீட்பருமானவர் உங்கள் அப்போஸ்தலர் வழியாகத் தந்த கட்டளையையும், நீங்கள் நினைவிற்கொள்ளுங்கள்.
3. முதன்முதல் நீங்கள் மனத்தில் வைக்க வேண்டியது: இறுதி நாட்களில், ஏளனம் செய்பவர்கள் தோன்றுவார்கள்.
4. தங்கள் இச்சைகளின்படி நடக்கும் இவர்கள், "அவர் வருகையைப்பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையர் இறந்துபோயினார்; ஆயினும் படைப்பின் தொடக்கத்திலிருந்தது போல எல்லாம் அப்படியே இருக்கின்றதே!" என ஏளனமாய்ப் பேசுவர்.
5. ஆனால் ஒன்றை இவர்கள் வேண்டுமென்றே மறந்து போகிறார்கள். அதாவது: கடவுளுடைய வார்த்தையால்தான் தொடக்கத்திலிருந்தே வானமும் நிலமும் உள்ளன; நிலம் நீரினின்றும் நீராலும் தோன்றி நிலைபெற்றுள்ளது.
6. அந்த நீராலே அன்றைய உலகம் வெள்ளப்பெருக்கில் அழிவுற்றது.
7. இதை அவர்கள் மறந்துபோகின்றனர். ஆனால் இப்போதுள்ள விண்ணும் மண்ணும் நெருப்பினால் அழிக்கப்பட அதே வார்த்தையால்தான் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன; இறைப்பற்றில்லாதவர்கள் அழிவுற வேண்டிய தீர்ப்பு நாளுக்கென்று அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன.
8. அன்பிற்குரியவர்களே, இன்னொன்றையும் மறக்கவேண்டாம்: ஆண்டவருக்கு ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள்போல்! ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள்போல்!
9. ஆண்டவர்தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலருக்குத் தோன்றுகிறது; ஆனால் அவர் காலந்தாழ்த்துவதில்லை; உங்கள் பொருட்டுப் பொறுமையாயிருக்கிறார்; ஒருவரும் அழிவுறக் கூடாது, எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றிருக்கிறார்.
10. ஆனால் ஆண்டவரது நாள் வந்தே தீரும்: அது திருடனைப்போல் வரும்; வானம் பேரிடி முழகத்துடன் மறைந்தொழியும், ஐம்பெரும் பூதங்கள் நெருப்பால் வெத்துருகிப்போகும்; மண்ணுலகும், அதில் வாழ்த்தோரின் செயல்களும் வெளியாக்கப்படும்.
11. இவை அனைத்தும் இவ்வாறு மறைந்தொழிந்து போகுமாதலின் கடவுளுடைய நாளுக்காகக் காத்திருந்து, அது விரைவில் வர உழைக்கும் நீங்கள், பரிசுத்த நடத்தையிலும் இறைப்பற்றிலும் எவ்வளவோ சிறந்து விளங்கவேண்டும்.
12. அந்நாள் வரும்போது வானங்கள் நெருப்புக்கிரையாகி மறைந்தொழியும், ஐம்பெரும் பூதங்கள் வெந்துருகிப்போகும்.
13. நாமோ, நீதி குடிகொள்ளும் புதிய வானமும் புதிய வையமும் அவர் வாக்களித்தபடியே வருமென்று காத்திருக்கிறோம்.
14. ஆகவே, அன்புக்குரியவர்களே, இவற்றிற்காகக் காத்திருக்கும் உங்களை அவர் மாசு மறுவற்றவர்களாய், அமைதியான நிலையில் காணும்படி உழைத்து வாருங்கள்.
15. நம் ஆண்டவரின் பொறுமையே நமக்கு மீட்பு என எண்ணுங்கள். நமது அன்புக்குரிய சகோதரர் சின்னப்பரும் தமக்கு அளிக்கப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறே உங்களுக்கு எழுதியிருக்கிறார்.
16. தம் கடிதங்களில் இதைப்பற்றிப் பேசும்போதெல்லாம் அதையே அவர் சொல்லுகிறார். புரிந்துகொள்வதற்குக் கடினமானவை சில அவருடைய கடிதங்களில் உள்ளன. அறியாதவர்களும் உறுதியற்றவர்களும் மறைநூலின் மற்றப் பகுதிகளுக்குப் பொருள் திரித்துக் கூறுவதுபோல, இவற்றிற்கும் கூறுகின்றனர். இதனால் தங்கள் மீதே அழிவை வருவித்துக் கொள்கின்றனர்.
17. அன்புக்குரியவர்களே, நீங்களோ இவையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். தீயவர்களின் தவறான கொள்கைகளால் இழுபட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
18. நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும், அவரை அறியச்செய்யும் அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இன்றும் என்றும் மகிமை உண்டாகுக, ஆமென்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×