Bible Books

:

1. அக்காலத்தில் ஏரோது அரசன் திருச்சபையினர் சிலரைத் துன்புறுத்த முற்பட்டான்.
2. அருளப்பரின் சகோதரரான யாகப்பரை வாளால் கொன்றான்.
3. அது யூதர்களுக்கு மகிழ்ச்சியளித்ததைக் கண்டு, இராயப்பரையும் கைது செய்தான்.
4. இது நிகழ்ந்தது புளியாத அப்பத் திருவிழா நாட்களில். கைது செய்தபின், அவரைச் சிறையில் வைத்துக் காவல்காக்க நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் ஒப்படைத்தான். பாஸ்கா முடிந்ததும் மக்கள் முன்னிலையில் அவரை விசாரணைக்காக நிறுத்தலாம் என நினைத்தான்.
5. இராயப்பர் இவ்வாறு சிறையில் இருக்கையில் திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் இடையறாது மன்றாடிக்கொண்டிருந்தது.
6. ஏரோது அவரை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு முந்தினநாள் இரவில், இராயப்பர் இரு விலங்குகள் மாட்டப்பட்டு, இரு படை வீரர்களுக்கிடையே தூங்கிக் கொண்டிருந்தார். காவலர் வாயிலுக்கு எதிரே நின்று சிறையைக் காவல் செய்தனர்.
7. அப்போது இதோ! ஆண்டவருடைய தூதர் அங்கே தோன்ற, அறை முழுவதும் ஒளிமயமாயிற்று. தூதர் இராயப்பரைத் தட்டியெழுப்பி, "சீக்கிரம் எழுந்திரும்" என்றார். உடனே விலங்குகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.
8. பின் வான தூதர், "உமது இடைக்கச்சையைக் கட்டி, மிதியடிகளைத் தொடுத்துக்கொள்ளும்" என்றார். அவரும் அவ்வாறே செய்தார். பிறகு வானதூதர், "உமது மேலாடையை அணிந்து கொண்டு என்னோடு வாரும்" என்றார்.
9. இராயப்பர் தூதரோடு வெளியே போனார். வான தூதரின் வாயிலாக நிகழ்ந்ததெல்லாம் உண்மை என்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக நினைத்துக்கொண்டார்.
10. முதற் காவலையும் இரண்டாங் காவலையும் கடந்து, நகருக்குச் செல்லும் வாயிலின் இருப்புக் கதவருகில் வந்தனர். அது தானாகவே திறந்தது. 'அவர்கள் வெளியே சென்று ஒரு தெருநெடுக நடந்துபோனதும், வான தூதர் அவரை விட்டகன்றார்
11. பின் இராயப்பர் தன்னுணர்வு பெற்று, "உண்மையாகவே, ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் பிடியிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்தவாறு நிகழாமல் என்னைக் காத்தார் என்று இப்பொழுது தெரிகிறது" என்றார்.
12. தம் நிலையை உணர்ந்துகொண்டு மாற்கு என்னும் அருளப்பருடைய அன்னையாகிய மரியாளின் வீட்டிற்குப் போனார்.
13. அங்கே பலர் கூடி செபித்துக்கொண்டிருந்தனர் அவர் தெருக் கதவைத் தட்டியபொழுது ரோதே என்னும் பணிப் பெண் யாரெனப் பார்க்க வந்தாள்.
14. அது இராயப்பரின் குரல் என்று தெரிந்துகொண்டு, மகிழ்ச்சி மிகுதியால் கதவைத் திறக்காமலே உள்ளே ஓடி, இராயப்பர் கதவருகில் நிற்பதாக அறிவித்தாள்.
15. அதற்கு அவர்கள், "உனக்குப் பைத்தியமா?" என்றனர். ஆனால் அவள் தான் சொல்வது உண்மையெனச் சாதித்தாள். அவர்களோ அது அவருடைய காவல் தூதராக இருக்குமோ என்றனர்.
16. இராயப்பர் விடாமல் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார். கதவைத் திறந்தபோது, அவரைப் பார்த்துத் திகைத்துப்போயினர்
17. பேசாதிருக்கும்படி சைகை காட்டி, ஆண்டவர் தம்மைச் சிறையிலிருந்து வெளிவரச் செய்தது பற்றி எடுத்துச் சொல்லி, "இதை யாகப்பருக்கும் சகோதரர்களுக்கும் அறிவியுங்கள்" என்றார். பிறகு புறப்பட்டு வேறொரு இடத்திற்குப் போய்விட்டார்.
18. பொழுது புலர்ந்ததும், இராயப்பருக்கு என்ன ஆயிற்று என்பதுபற்றி படைவீரர்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டது.
19. ஏரோது அவரைத் தேடிப் பார்க்கச் சொன்னான். எங்கும் காணாமையால் காவலர்களை விசாரித்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்தான். பின் அவன் யூதேயாவை விட்டு செசரியாவுக்குச் சென்று அங்குத் தங்கினான்.
20. அந்நாளில் ஏரோது, தீர், சீதோன் நகரத்தார் மீது வெஞ்சினம்கொண்டிருந்தான். அந்நிலையில் தங்கள் நாடு அரசனுக்குட்பட்ட நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை எதிர்பார்க்க வேண்டியிருந்ததால், அவர்கள் ஒருமனப்பட்டு அவனைக் காண வந்தனர். அரண்மனை மேற்பார்வையாளனான பிலாத்துவைத் தம் வயப்படுத்திக்கொண்டு அரசனது நட்புறவை நாடி நின்றனர்.
21. குறித்த நாளில் ஏரோது அரச உடையணிந்து மேடையில் வீற்றிருந்து அவர்களுக்கு உரையாற்றுகையில்,
22. "இது மனிதனின் பேச்சல்ல, ஒரு தெய்வத்தின் பேச்சே" என்று மக்கள் ஆர்ப்பரித்தனர்.
23. அவன் கடவுளுக்கு மகிமை செலுத்தாததினால், ஆண்டவரின் தூதர் அவனை உடனே தண்டிக்கவே, அவன் புழுத்துச் செத்தான்.
24. கடவுளின் வார்த்தை வளர்ச்சி பெற்றுப் பரவிவந்தது.
25. பர்னபாவும் சவுலும் தம் ஊழியத்தை முடித்துவிட்டு மாற்கு என்னும் அருளப்பரை அழைத்துக்கொண்டு யெருசலேமிலிருந்து திரும்பினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×