Bible Books

:

1. அதற்கு யோபு சொன்ன மறுமொழி இதுவே:
2. மெய் தான், நீங்கள் தான் மக்களின் குரல்; நீங்கள் சாகும் போது ஞானமே செத்துப் போகும்.
3. ஆனால் உங்களைப் போல் எனக்கும் அறிவுண்டு; உங்களினும் நான் தாழ்ந்தவனல்ல; உங்களுக்குத் தெரிந்தது யாருக்குத் தான் தெரியாது?
4. கடவுளைக் கூவியழைத்து அவரிடமிருந்து மறுமொழி பெற்ற நான்- மாசற்ற நீதிமானாகிய நான்- என் நண்பர்களின் ஏளனத்திற்கு ஆளானேன்!
5. இன்ப வாழ்க்கையில் திளைப்பவன் துன்பத்தை வெறுக்கிறான்; ஆனால் இடறி விழுவோருக்கு அது துணையாகக் காத்திருக்கிறது.
6. கள்ளர்களின் கூடாரங்கள் அமைதியாய் இருக்கின்றன, கடவுளுக்கு எரிச்சலூட்டுவோரும், தங்கள் கைவன்மையைக் கடவுளாய்க் கொள்வோரும் அச்சமின்றி வாழ்கின்றனர்.
7. ஆனால் மிருகங்களைக் கேளும், அவை உமக்குக் கற்பிக்கும்; வானத்துப் பறவைகளை வினவும், அவை உமக்குச் சொல்லும்.
8. அல்லது ஊர்வனவற்றைக் கேளும், அவை உமக்கு விளக்கும்; கடலின் மீன்கள் உமக்கு விவரித்துக் கூறும்.
9. ஆண்டவருடைய கையே இதைச் செய்ததென்பது இவை யாவற்றுள்ளும் எதற்குத்தான் தெரியாது?
10. உயிருள்ளவை அனைத்தின் வாழ்வும், எல்லா மனிதரின் மூச்சும் அவர் கையில் தான் உள்ளன.
11. நாக்கு உணவைச் சுவை பார்ப்பது போல், காதும் சொற்களைச் சோதிக்கிறதன்றோ?
12. முதியோரிடத்தில் ஞானமுண்டு, நீண்ட நாள் வாழ்ந்தவரிடம் அறிவு இருக்கிறது.
13. கடவுளிடம் ஞானமும் வல்லமையும் உள்ளன, புத்திக் கூர்மையும் அறிவு நுட்பமும் அவரிடம் உள்ளன.
14. அவர் இடித்தால், மீண்டும் கட்டியெழுப்ப எவனாலும் முடியாது; அவர் மனிதனைச் சிறையில் வைத்தால், விடுவிக்க யாராலும் ஆகாது.
15. அவர் தண்ணீரைத் தடைசெய்தால், யாவும் வறண்டு போம்; அவர் மடையைத் திறந்து விட்டாலோ, நிலமே மூழ்கிப் போகும்.
16. அவரிடம் ஆற்றலும் அறிவும் இருக்கின்றன; ஏமாறுபவனும் ஏமாற்றுகிறவனும் அவருக்குக் கீழுள்ளவர்களே.
17. ஆலோசனைக்காரரை மதியிழக்கச் செய்கிறார், நீதிபதிகளை அறிவிலிகளாக்குகிறார்.
18. அரசர்களின் இடைக்கச்சைகளை அவிழ்த்துவிட்டு அவர்கள் இடுப்பிலே கயிற்றைக் கட்டுகிறார்.
19. அர்ச்சகர்களின் பெருமையைப் பறித்துக் கொள்வார், வல்லவர்களைக் கவிழ்த்து விடுவார்.
20. சொல்வன்மை உள்ளவர்களை ஊமையாக்குவார், முதியவர்களின் மதிநுட்பத்தைப் பிடுங்கிக் கொள்வார்.
21. பெருங்குடி மக்கள் மேல் அவமானத்தைப் பொழிவார், ஆற்றல் படைத்தவர்களின் கச்சையைத் தளர்த்தி விடுவார்.
22. இருளின் ஆழத்திலுள்ளவற்றை வெளியாக்குவார், ஆழ்ந்த இருளை ஒளிக்குக் கொண்டு வருவார்.
23. நாடுகள் மேன்மையடையவும் அழியவும் செய்கிறார், மக்களினங்கள் பரவவும் அழியவும் செய்கிறார்.
24. உலக மக்களின் தலைவர்களிடமிருந்து அறிவை அகற்றுகிறார், திக்கற்ற பாலை வெளியில் அவர்களை அலையச் செய்கிறார்.
25. ஒளியின்றி இருளிலே அவர்கள் தடவிக்கொண்டு நடக்கின்றனர், குடி போதையில் உள்ளவனைப்போல் அவர்களைத் தள்ளாடச் செய்கிறார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×