Bible Books

:

1. அதைக் கேட்டு மக்கள் எல்லாரும் அன்றிரவு கூக்குரலிட்டுப் புலம்பினர்.
2. இஸ்ராயேல் மக்கள் யாவரும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்துப் பேசினார்கள்.
3. அவர்களை நோக்கி: நாங்கள் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் நலமாயிருந்திருக்கும். நாங்கள் வாளால் வெட்டுண்டு மடியும்படியாகவும், எங்களை மனைவி மக்கள் பிடியுண்டு கொண்டுபோகப் படும்படியாகவும் ஆண்டவர் எங்களை அந்த நாட்டிற்குக் கொண்டு போவதைவிட, நாங்கள் இப்பொழுதே இப்பெரிய பாலைவனத்தில் செத்து மடிவது நலமே. எகிப்துக்குத் திரும்பிப் போவதும் சிறந்ததே என்றார்கள்.
4. பின்னும் அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி: நமக்கு ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்கே திரும்பிப் போகலாம் என்றார்கள்.
5. மோயீசனும் ஆரோனும் இதைக் கேட்டு இஸ்ராயேல் முழுச் சபைக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள்.
6. அப்பொழுது, நாட்டைச் சுற்றிப் பார்த்து வந்தவர்களில் நூனின் புதல்வனாகிய ஜோசுவாவும் ஜெப்புனேயின் புதல்வனாகிய காலேபும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
7. இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரையும் நோக்கி: நாங்கள் சுற்றிப்பார்த்து வந்தோமே அந்த நாடு மிகவும் நல்ல நாடு.
8. ஆண்டவர் நம்மீது கருணை கொண்டிருப்பாராயின், அந்த நாட்டிற்கு நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் பொழியும் அந்தப் பூமியை அவர் நமக்குக் கொடுப்பார்.
9. நீங்கள் ஆண்டவருக்கு விரோதமாய்க் கலகம் செய்ய வேண்டாம். அந்த நாட்டின் குடிகளுக்கு நீங்கள் அஞ்சவும் வேண்டாம். ஏனென்றால், அப்பத்தைப் போல் நாம் அவர்களை விழுங்கி விடலாம். அவர்களுக்குக் கடவுளின் உதவி கிடையாது. ஆண்டவர் நம்மோடிருக்கிறார். அவர்களுக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை என்று சொன்னார்கள்.
10. அப்போது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டு அவர்கள் மேல் கல்லெறிய இருக்கையில், இதோ ஆண்டவருடைய மாட்சி உடன்படிக்கைக் கூடாரத்தின்மீது இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தென்பட்டது.
11. ஆண்டவர் மோயீசனை நோக்கி: இந்த மக்கள் எது வரையிலும் என்னை நிந்திப்பார்கள்? அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நாம் காட்டியுள்ள அருங்குறிகளை யெல்லாம்
12. அவர்கள் கண்டிருந்தும் எது வரையிலும் நம்மை விசுவசியாதிருப்பார்கள். ஆகையால் நாம் அவர்களைக் கொள்ளை நோயினால்தண்டித்து அழித்து விடுவோம். உன்னையோ அவர்களைக் காட்டிலும் பெரிதும் வலியதுமான ஓர் இனத்திற்குத் தலைவனாக ஏற்படுத்துவோம் என்றருளினார்.
13. மோயீசனோ ஆண்டவரை நோக்கி: எவர் நடுவிலிருந்து இந்த மக்களைக் கொண்டு வந்தீரோ அந்த எகிப்தியரும்,
14. இந்த நாட்டுக் குடிகளும்இதைக் கேட்டு என்ன சொல்வார்கள்? ஆண்டவரே நீர் உமது மக்களின் நடுவே வாழ்ந்துவருகிறதையும், இவர்கள் கண்கொண்டு உம்மை நேரில் காண்கிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்பு மயமான தூணிலும் நீர் இருந்து இவர்களுக்கு முன் செல்லுகிறதையும்அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள் அல்லவோ?
15. நீர் ஒரு மனிதனின் கொலைக்கும் கணக்கற்ற மனிதர்களின் கொலைக்கும் வேறுபாடு ஒன்றும் பாராமல் (இஸ்ராயேலர்) எல்லாரையும் சாகடிப்பீராயின், அவர்கள் சொல்லப்போவது என்னவென்றால்,
16. ஆண்டவர் ஆணையிட்டு வாக்குறுதி வழங்கியிருந்த நாட்டிலே அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க ஆற்றல் அற்றவராய் இருந்ததனால் அல்லவா அவர்களைப் பாலைவனத்திலேயே கொண்று தீர்த்தார்? என்பார்களே!
17. ஆகையால், உம்முடைய வலிமை தழைத்தோங்கக் கடவதாக.
18. ஆண்டவர் பொறுமையும் மிகுந்த இரக்கமும் உள்ளவர்; அவர் அக்கிரமத்தையும் பாவங்களையும் மன்னிக்கிறார்; அவர், தந்தையர்செய்த அக்கிரமத்தை அவர்களுடைய பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நாலாம் தலைமுறை வரையிலும் விசாரிக்கிறார்; ஆனால், குற்றமில்லாதவர்களை ஆதரித்து வருகிறார் என்று நீரே ஆணையிட்டுக் கூறியதில்லையா?
19. ஆண்டவரே உம்மை மன்றாடுகிறேன். உம்முடைய வல்லபமுள்ள இரக்கத்தினாலே எகிப்தை விட்ட நாள் முதல் இந்நாள் வரையிலும் நீர் இம் மக்களை மன்னித்து வந்நது போல இப்பொழுதும் இவர்களுடைய அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றார்.
20. அதற்கு ஆண்டவர்: உன் வேண்டுகோளின்படியே மன்னித்தோம்.
21. நாம் வாழ்கிறவர். பூமியெல்லாம் ஆண்டவருடைய மகிமையினால் நிறைந்திருக்கும்.
22. ஆயினும் (கேள்) நமது மாட்சியையும், நாம் எகிப்திலும் பாலைவனத்திலும் செய்த அருங்குறிகளையும் கண்டிருந்தும், எவரெவர் நம்மை ஏற்கனவே பத்துமுறையும் சோதித்து நம் கட்டளைகளை மீறியிருக்கிறார்களோ, அவர்களில் ஒருவனும்,
23. நாம் அவர்களுடைய முன்னோருக்கு ஆணையிட்டு வாக்குறுதி வழங்கிய நாட்டைக் காணமாட்டார்கள். அவர்களில் எவர் நம்மை அவமதித்துப் பேசினார்களோஅவர்கள் யாராயிருந்தாலும்அதைக் காணப்பபோவதில்லை.
24. நம்முடைய ஊழியனாகிய காலேபோ அந்தக் கெடுமதியில்லாமல் நன்மதியுள்ளவனாய் நம்மைப் பின்பற்றி வந்தான். (ஆதலால்) தான் போய்ச் சுற்றிப் பார்த்த நாட்டிலே அவனைச் சேர்ப்பிப்போம். அவன் சந்ததியார் அதனை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
25. அமலேக்கியரும் கானானையரும்இப்பள்ளத்தாக்குகளில் குடியிருக்கிறபடியால், நாளை நீங்கள் பாளையம் பெயர்ந்து, செங்கடலுக்குப் போகும் வழியாய் பாலைவனத்திற்குத் திரும்பிப் பயணம் செய்யுங்கள் என்றருளினார்.
26. பின் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
27. பெரும் கயவராகிய இந்த மக்கள் எது வரையிலும் நமக்கு விரோதமாய் முறுமுறுப்பார்கள்? இஸ்ராயேல் மக்களுடைய குறைப்பாடுகளைக் கேட்டுக் கொண்டோம்.
28. ஆகையால், நீ அவர்களுக்கு ஆண்டவர் சொல்கிறதாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நாம் வாழ்கிறவர். நீங்கள் நம் செவிகள் கேட்கச் சொல்லிய வண்ணமே உங்களுக்குச் செய்வோம்.
29. இந்தப் பாலைவனத்திலேயே உங்கள் பிணங்கள் கிடக்கும். உங்களில் இருபது வயது உள்ளவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுமாக எண்ணப்பட்டவர்களில் எவரெவர் நமக்கு விரோதமாய் முறுமுறுத்துப் பேசினார்களோ அவர்களுள்
30. ஜெப்பனேயின் புதல்வன் காலேப், நூனின் புதல்வன் ஜோசுவா என்பவர்களைத் தவிர மற்றெவனும், நாம் உங்களைக் குடியேறச் செய்வோமென்று ஆணையிட்டு வாக்குறுதி வழங்கிய அந்த நாட்டில் புகுவதில்லை.
31. பகைவர் கையில் அகப்படுவார்களென்று உங்கள் பிள்ளைகளைக் குறித்துச் சொன்னீர்களே; நாம் அவர்களையே அதில் குடிபுகச் செய்வோம். நீங்கள் அசட்டை செய்த நாட்டை அவர்கள் காண்பார்கள்.
32. உங்கள் பிணங்களோ இந்தப் பாலைவனத்தில் கிடக்கும்.
33. அவைகள் பாலைவனத்திலே விழுந்து அழிந்து தீருமட்டும் உங்கள் பிள்ளைகள் நாற்பதாண்டு பாலைவனத்திலே திரிந்து, உங்கள் விசுவாசத்துரோகத்தைச் சுமந்து கொண்டிருப்பார்கள்.
34. நீங்கள் அந்நாட்டை சுற்றிப்பார்த்த நாற்பது நாள் கணக்கின்படியே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டாகக் கணிக்கப்படும். அப்படியே நீங்கள் நாற்பது ஆண்டுகளாய் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து கொள்வதன் மூலம் நமது பழியைக் கண்டுணர்வீர்கள்.
35. நமக்கு விரோதமாய் எழும்பின மிகவும் பொல்லாத இந்த மக்களுக்கு நாம் பேசினபடியே செய்வோம். அவர்கள் இப்பாலைவனத்தில் வாடி வதங்கிச் சாவார்கள் என்பாய் என்றார்.
36. ஆகையால், அந்த நாட்டைச் சோதித்துப் பார்க்கும்படி மோயீசனால் அனுப்பப்பட்டு, அதைக் குறித்துத் தீய செய்தியைக் கொண்டு வந்து, மக்களெல்லாம் மோயீசனுக்கு விரோதமாய்ச் பேசக் காரணமாய் இருந்தவர்களாகிய,
37. அவர்கள் எல்லாரும் வாதையினால் ஆண்டவர் சமூகத்தில் செத்தார்கள்.
38. நாட்டைச் சோதித்துப் பார்க்கப் போயிருந்தவர்களில் நூனின் புதல்வனாகிய ஜோசுவா, ஜெப்பனேயின் புதல்வனாகிய காலேப் என்பவர்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்கள்.
39. மோயீசன் இவ்வார்த்தையெல்லாம் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் சொல்லியபொழுது, அவர்கள் மிகவும் புலம்பி அழுதார்கள்.
40. அதிகாலையில் அவர்கள் எழுந்து: நாங்கள் பாவம் செய்தோம். ஆண்டவர் சொல்லிய இடத்திற்குப் போகத் தயாராய் இருக்கிறோம் என்று சொல்லி, மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்.
41. மோயீசன் அவர்களை நோக்கி: நீங்கள் ஆண்டவருடைய வார்த்தையை மீறுகிறதென்ன? இது உங்களுக்கு வாய்ப்பதாயில்லை.
42. நீங்கள் பகைவர் முன்னிலையில் முறியடிக்கப்படா வண்ணம், ஏறிப்போகாதீர்கள். ஆண்டவர் உங்களோடு இல்லை.
43. உங்களுக்கு முன்னே அமலேக்கியரும் கானானையரும் அங்கு இருக்கிறார்கள். நீங்கள் ஆண்டவருக்குப் பணியாததால், ஆண்டவர் உங்களோடு இருக்கவே மாட்டார். ஆகையால், நீங்கள் அவர்களுடைய வாளுக்கு இரையாவீர்கள் என்றார்.
44. ஆனால், அவர்கள் குருட்டாட்டமாய் மலையுச்சியில் ஏறினார்கள். ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டகமும் மோயீசனும் பாளையத்தை விட்டுப் போகவில்லை.
45. அப்பொழுது மலையில் வாழ்ந்திருந்த அமலேக்கியரும் கானானையரும் இறங்கி வந்து, அவர்களைத் தோற்கடித்து வெட்டி, ஓர்மா வரையிலும் துரத்தியடித்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×