Bible Books

9
:
-

1. ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு ஆதிராக் நாட்டில் இருக்கிறது, தமஸ்கு நகரத்தில் தங்கியிருக்கிறது; ஏனெனில், இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களைப் போலவே, ஆராம் நாட்டு நகரங்களும் ஆண்டவருக்கே சொந்தம்.
2. அதற்கு எல்லையாய் அமைந்திருக்கும் ஏமாத்தும், ஞானத்தில் சிறந்திருக்கும் தீரும் சீதோனும் சொந்தமே.
3. தீர் தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்டது; தூசியைப்போல வெள்ளியும், தெருக்களின் சேற்றைப் போல பொன்னையும் சேர்த்து வைத்தது.
4. ஆனால் இதோ, ஆண்டவர் அந்நகரைப் பிடித்துக்கொள்வார், அதன் செல்வப் பெருக்கைக் கடலில் தள்ளுவார். அந்நகரமும் நெருப்புக்கு இரையாகும்.
5. அஸ்காலோன் அதைக் கண்டு அஞ்சி நடுங்கும், காசாவும் கண்டு மனவேதனையால் துடிக்கும், அக்காரோன் தன் நம்பிக்கை குலைந்ததால் துயரடையும், காசாவில் அரசன் இல்லாமல் அழிந்துபோவான்; அஸ்காலோன் குடிகளற்றுக்கிடக்கும்.
6. அசோத்தில் கலப்பினத்து மக்கள் குடியிருப்பார்கள், பிலிஸ்தியரின் செருக்கை நாம் அழித்தொழிப்போம்.
7. இரத்தம் வடியும் இறைச்சியை அதன் வாயினின்றும், அருவருப்பான உணவை அதன் பற்களிடையிலிருந்தும் அகற்றுவோம். அவ்வினத்தாரும் நம் கடவுளுக்குரிய எஞ்சினோராய் இருப்பர், யூதாவில் ஒரு கோத்திரம் போல் இருப்பர்; அக்காரோன் ஊரார் எபுசேயரைப் போல் இருப்பர்.
8. அங்குமிங்கும் திரிகிறவர்களுக்கு எதிராக நாமே நம் இல்லத்தினருகில் காவல் வீரனைப் போலப் பாளையமிறங்கித் தங்குவோம். கொடுமை செய்பவன் எவனும் அதன்மேல் வாரான்; ஏனெனில் அதன் நிலைமையை நாமே கண்ணால் கண்டோம்.
9. சீயோன் மகளே, மிகுந்த மகிழ்ச்சியால் அக்களி, யெருசலேம் மகளே, ஆர்ப்பரி; இதோ, உன் அரசர் உன்னிடம் வருகிறார், நீதியும் வெற்றியும் பெற்றுக்கொண்ட அந்த வீரர் எளியவர்; கழுதையின் மேலும், பொதிமிருகக் குட்டியின் மேலும் அமர்ந்து வருகிறார்.
10. எப்பிராயீமிடமிருந்து, தேர்ப்படையையும், யெருசலேமிலிருந்து குதிரைப்படையையும் அழிப்போம்; போர்க்கருவியான வில் முறிக்கப்படும்; புறவினத்தார்க்குச் சமாதானத்தை அறிவிப்பார்; அவருடைய ஆட்சி ஒரு கடல் முதல் மறுகடல் வரையும், பேராறு முதல் மாநிலத்தின் எல்லைகள் வரையும் செல்லும்.
11. உன்னோடு நாம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு நீரற்ற பாதாளத்திலிருந்து சிறைப் பட்டவர்களை விடுவிக்கிறோம்.
12. நம்பிக்கையுள்ள கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இரு மடங்கு நன்மைகள் தருவோமென இன்று நாம் உங்களுக்கு அறிவிக்கிறோம்.
13. யூதா என்னும் வில்லை நாணேற்றினோம், எப்பிராயீமை அதிலே அம்பாய் வைத்தோம்; கிரிஸ் நாடே, உன்னுடைய மக்கள் மீது சீயோனே, உன் மக்களை ஏவிவிட்டு, உன்னை வல்லவனின் வாளாக்குவோம்.
14. அப்போது ஆண்டவர் அவர்கள் மீது தோன்றுவார், அவரது அம்பு மின்னலைப் போலப் பாய்ந்து செல்லும்; இறைவனாகிய ஆண்டவர் எக்காளவொலி எழுப்புவார், தென்றிசைச் சூறாவளி நடுவில் நடந்து போவார்.
15. சேனைகளின் ஆண்டவர் அவர்களைப் பாதுகாப்பார்; கவண் வீரர்களை அவர்கள் விழுங்குவர், மிதித்துத் துவைப்பர்; இரசத்தைப் போல் இரத்தம் குடித்துப் போதை கொள்வர்; கிண்ணம் போல நிரம்பியும், பீடத்தின் கொம்புகள் போல நனைந்தும் இருப்பர்.
16. அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்களை மீட்பார்; ஏனெனில் அவர்களும் அவர் தம் மக்களின் மந்தையே; மணிமுடியில் பதித்த விலையுயர்ந்த கற்களைப் போல் அவரது நாட்டில் அவர்கள் ஒளிர்வார்கள்.
17. ஆம், அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! எவ்வளவு அழகு! தானியம் இளங்காளையரைத் தழைக்கச் செய்யும், புதுத் திராட்சை இரசம் கன்னிப் பெண்களைச் செழிக்கச் செய்யும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×