Bible Books

:

1. பின், இஸ்ராயேல் தனக்குள்ள யாவற்றையும் சேர்த்துக் கொண்டு பயணமாகி, பிரமாணிக்கக் கிணறு என்னும் இடம் வந்து சேர்ந்தான். அவ்விடத்தில் தன் தந்தையாகிய ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தான்.
2. அன்றிரவு கடவுள் அவனுக்குத் தோன்றி: யாக்கோப், யாக்கோப் என்று அழைப்பதைக் கேட்டு, அவன்: இதோ இருக்கிறேன் என்று பதில் கூறினான்.
3. கடவுள்: உன் தந்தையின் எல்லாம் வல்ல கடவுள் நாமே. அஞ்சாதே. எகிப்து நாட்டிற்குப் போ. ஏனென்றால், அங்கே உன்னைப் பெருங்குடியாக வளரச் செய்வோம்.
4. நாம் உன்னோடு அவ்விடத்திற்கு வருவோம். நாம் அவ்விடத்திலிருந்து திரும்பி வரும் போது உன்னை கூட்டி வருவோம். சூசை தன் கையாலே உன் கண்களை மூடுவான் என்றார். யாக்கோபு பிரமாணிக்கக் கிணறு என்னும் இடத்திலிருந்து எழுந்தான்.
5. அப்பொழுது அவன் புதல்வர்கள், அவனையும் அவன் பிள்ளைகளையும் மனைவிகளையும் முதிர்ந்த வயதினனாகிய அவனுக்குப் பாரவோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டான்.
6. கானான் நாட்டில் அவன் சம்பாதித்திருந்த சொத்துக்கள் யாவற்றையும் கூடச் சேர்த்துக் கொண்டான். யாக்கோபு அவற்றோடும் தன் இனத்தார் எல்லோரோடும் எகிப்துக்குப் போனான்.
7. அவன் புதல்வரும் பேரரும் புதல்வியரும் (அவன்) இனத்தார் அனைவரும் அவனோடு போனார்கள்.
8. இஸ்ராயேல் தன் புதல்வரோடு எகிப்தை அடைந்த போது அவனுடைய புதல்வர்களின் பெயர்களாவன: மூத்த புதல்வன் ரூபன்.
9. ரூபனின் புதல்வர்: ஏனோக், பால்லு, எஸ்ரோன், கர்மி என்பவர்களாம்.
10. சிமையோனின் புதல்வர்: ஜமுயேல், ஜமீன், அகோத், ஜக்கீன், சோகார், கானானையப் பெண்ணின் மகனான சவுல் என்பவர்களாம்.
11. லேவியின் புதல்வர்: யெற்சோன், காவாத், மெராரி என்பவர்களாம்.
12. யூதாவின் புதல்வர்: கேர், ஓனான், சேலா, பாரேஸ், ஜாரா என்பவர்களாம். கேரும் ஓனானும் கானான் நாட்டிலே இறந்து போயினர். எஸ்ரோன், ஆமுல் என்பவர்கள் பாரேஸீக்குப் பிறந்த புதல்வர்களாம்.
13. இசாக்காரின் புதல்வர்: தோலா, புவா, ஜோப், செமிரோன் என்பவர்களாம்.
14. சரேத், எலோன், ஜயேலேல் என்பவர்கள் சாபுலோனின் புதல்வர்.
15. இவர்களை லீயாள் என்பவள் சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவிலே பெற்றாள். தீனாள் அவளது புதல்வி, அவளுக்குப் பிறந்த புதல்வர் புதல்வியர் எல்லாரும் முப்பத்து மூன்று பேர்.
16. காத்தின் புதல்வர்: செப்பியோன், அஃகி, சூனி, எசபோன், கேறி, அரோதி, ஆரேலி என்பவர்களாம்.
17. அசேரின் புதல்வர்: ஜமினே, ஜெசுவா, ஜெசுவி, பெரியா என்பவர்களாம். சாராள் இவர்களுடைய சகோதரி. எபேரும், மேற்கியேலும் பெரியாவின் புதல்வர்.
18. இவர்கள், லாபான் தன் புதல்வியாகிய லீயாளுக்குக் கொடுத்த ஜெல்பாளுடைய பிள்ளைகள். அவள் இந்தப் பதினாறு பேர்களையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.
19. சூசை, பெஞ்சமின் என்பவர்கள், யாக்கோபின் மனைவி இராக்கேலின் புதல்வர்கள்.
20. சூசைக்கு எகிப்து நாட்டிலே புதல்வர் பிறந்தனர். எலியோப்பொலிசின் குருவாகிய புத்திபாரே என்பவரின் புதல்வியான ஆஸ்னேட், அவர்களை அவருக்குப் பெற்றனள். அவர்கள்: மனாசே, எபிராயிம் என்பவர்களாம்.
21. பெஞ்சமினின் புதல்வர்: பேலா, பேக்கோர், அஸ்பேல், ஜெரா, நாமான், எக்கி, ரோஸ், மொபீம், ஓபீம், ஆரேத் என்பவர்களாம்.
22. இவர்களே இராக்கேல் யாக்கோபுக்குப் பெற்ற பதினான்கு புதல்வர்களாம்.
23. தானுக்கு ஊசீம் என்னும் (ஒரே புதல்வன்) இருந்தான்.
24. நெப்தலியின் புதல்வர்: ஜசியேல், கூனி, ஜெசேல், சல்லேம் என்பவர்களாம்.
25. இவர்கள், லாபான் தன் புதல்வியாகிய இராக்கேலுக்குக் கொடுத்த பாளாளின் புதல்வர். இவர்களை அவள் யாக்கோபுக்குப் பெற்றாள். அவர்கள் மொத்தம் ஏழு பேர்களாம்.
26. யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவிகளைத் தவிர, அவனுடைய சந்தானப் புதல்வராயிருந்து எகிப்தில் குடிபுகுந்தோர் எல்லாரும் அறுபத்தாறு பேர்.
27. எகிப்து நாட்டிலே சூசைக்குப் பிறந்த புதல்வர்களோ இரண்டுபேர். (ஆகவே,) எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லாரும் எழுபது பேர்களாம்.
28. யேசேன் நாட்டில் சூசை தம்மை வந்து சந்திக்கவேண்டுமென்று சொல்லும்படி யாக்கோபு யூதாவை அவனுக்குத் தூதராக அனுப்பினார்.
29. இவன் அவ்விடம் சேர்ந்ததும், சூசை தம் தேரைத் தயார் செய்து, அதன் மேல் ஏறித் தந்தைக்கு எதிர் கொண்டு போய், அவனைக் கண்டவுடன் அவன் கழுத்தின் மீது விழுந்து அணைத்து அணைத்து அழுதார்.
30. அப்பொழுது தந்தை சூசையை நோக்கி: (அப்பா மகனே!) உன் முகத்தை நான் கண்டு விட்டேன்! எனக்குப் பின் உன்னை உயிருடன் இவ்வுலகில் விட்டுவைப்பேன்! ஆதலால், எனக்கு இப்பொழுதே சாவு வந்தாலும் மகிழ்ச்சி தான் என்றான்.
31. அவரோ, தம் சகோதரரையும், தம் தந்தையின் குடும்பத்தாரையும் பார்த்து: நான் பாரவோனிடம் போய்: கானான் நாட்டிலிருந்து என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.
32. அவர்களோ ஆடு மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும், தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குச் செய்தி சொல்லுவேன்.
33. அவர் உங்களை வரவழைத்து: உங்கள் தொழில் என்ன என்று வினவும் போது, நீங்கள் மறுமொழியாக:
34. சிறு வயது முதல் இந்நாள் வரை உமது அடிமைகளாகிய நாங்கள் எங்கள் முன்னோர்களைப் போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் யேசேன் நாட்டில் குடியிருக்கும்படியாகவே அவ்விதம் சொல்லுங்கள். ஏனென்றால், ஆடு மேய்ப்பவர்களை எகிப்தியர் மிகவும் வெறுக்கின்றனர் என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×