Bible Books

:

1. இறைவா, நீர் எங்களை ஏன் என்றென்றைக்கும் தள்ளி விட்டீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள் மேல் உமக்குச் சினம் மூள்வதேன்?
2. ஆதிகால முதல் நீர் நிறுவிய உமது சபையை நினைவு கூர்ந்தருளும்; உம்முடைய உரிமைப் பொருளென மீட்டுக்கொண்ட குலத்தை நினைவு கூர்ந்தருளும் உமது உறைவிடம் அமைந்துள்ள சீயோன் மலையை நினைவு கூர்ந்தருளும்.
3. நெடுங்காலமாய்ப் பாழ்பட்டுக் கிடந்த இடத்தை நோக்கி அடி எடுத்து வையும்: பகைவன் உமது திருத்தலத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டான்.
4. உம் மக்கள் கூடிய தலத்தில் உம்முடைய எதிரிகள் முழக்கமிட்டனர். தங்கள் கொடிகளை அங்கே வெற்றிச் சின்னங்களாக நாட்டினர்.
5. அடர்ந்த சோலையில் கோடாரியைக் கையில் தாங்குபவர்கள் போலாயினர்.
6. இதோ, அவர்கள் கோடாரியும் சம்மட்டியும் கொண்டு, அதன் வாயில்களைத் தகர்ந்தெறிகின்றனர்.
7. உமது திருத்தலத்தைத் தீக்கிரையாக்கினர். மாநிலத்தில் உமது பெயர் விளங்கிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினர்.
8. அவர்கள் அனைவரையும் பூண்டோடு அழித்து விடுவோம், இறைவனின் திருத்தலங்களனைத்தையும் மாநிலமெங்கும் எரித்து விடுவோம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
9. முன்னைய அருங்குறிகள் எவையும் காணோம், இறைவாக்கினர் எவருமில்லை. இந்நிலை எந்நாள் வரைக்கும் நீடிக்கும் என்று அறிபவன் நம்மிடையே யாருமில்லை.
10. இறைவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? உமது பெயரைப் பகைவன் என்றென்றுமே பழிப்பானோ?
11. உமது கரத்தை ஏன் நீட்டாமலிருக்கிறீர்? ஏன் உம் வலக்கரத்தை மடக்கி வைத்திருக்கிறீர்?
12. ஆதியிலிருந்தே கடவுள் என் அரசராயுள்ளார். மாநிலத்தில் மீட்புத் தருபவர் அவரே.
13. உமது வல்லமையால் கடலைப் பிளந்து விட்டீர். நீரில்வாழ் பறவை நாகங்களின் தலைகளை நசுக்கி விட்டீர்.
14. திமிலங்களின் தலைகளை உடைத்து விட்டீர். கடல் வாழ் விலங்குளுக்கு அவற்றை இரையாகக் கொடுத்தீர்.
15. ஊற்றுகளையும் நீரோடைகளையும் புறப்படச் செய்தீர். பெருக்கெடுத்தோடும் ஆறுகளை வற்றச் செய்தீர்.
16. பகலும் உமதே, இரவும் உமதே, நிலவையும் கதிரவனையும் அமைத்தவர் நீரே.
17. பூமிக்கு எல்லைகளைத் திட்டம் செய்தவர் நீரே. கோடையும் மாரியும் ஏற்படுத்தியவர் நீரே.
18. ஆண்டவரே, பகைவன் உம்மைப் பழித்தான். தீய மக்கள் உமது திருப்பெயரைச் சபித்தனர்; இதை நினைவுகூரும்.
19. உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பருந்துக்கு இரையாக விட்டு விடாதேயும் உம்முடைய எளிய மக்களின் வாழ்வை ஒரு நாளும் மறவாதேயும்.
20. உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும். பூமியின் மறைவிடங்களிலும் வெளியிடங்களிலும் கொடுமை நிறைந்திருக்கிறதே!
21. சிறுமையுற்றவன் ஏமாற்றமடைய விடாதேயும். ஏழை எளியோர் உமது திருப்பெயரைப் புகழ்வாராக.
22. எழுந்தருளும் இறைவனே, உமது வழக்கை நீரே நடத்தும். அறிவிலியால் நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைவு கூரும்.
23. உம்மை எதிர்த்து எழுபவர்களின் அமளி எந்நேரமும் அதிகரிக்கின்றது. உமது எதிரிகள் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×